ஜனாதிபதியின் கட்டிலை சலேக்கு வழங்குங்கள்; முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர

ஜயவர்தனபுர வைத்தியசாலையில் பொதுமக்களுக்காக ஒதுக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள ஜனாதிபதிக்கான கட்டிலை, கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானியான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவுக்கு வழங்கப்பட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
உடல்நிலை ஆரோக்கியமாக இருந்த சுரேஷ் சலே தற்போது கடுமையாக சுகயீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ஜயவர்தனபுர வைத்தியசாலையில் ஜனாதிபதிக்காக ஒதுக்கப்பட்டிருந்த கட்டிலை சாதாரண மக்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இந்த கட்டிலை சுரேஷ் சலேவுக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோருகின்றோம். அதாவது சட்டவிரோதமாக கைது செய்யப்பட்ட சுரேஷ் சலேவுக்கு செய்த பாவத்தை இதன்மூலம் சீர் செய்ய முடியுமாக இருக்கும் என்று நினைக்கின்றோம்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கடந்த காலங்களில் நடந்த எந்த விசாரணைகளிலும் சுரேஷ் சலேவின் பெயர் குறிப்பிடப்படவில்லை. எப்.பி.ஐ அறிக்கையிலும் இவரின் பெயர் இருக்கவில்லை. இவ்வாறான நிலைமையில் யுத்தத்தில் பெரும் பங்களிப்பு செய்த சுரேஷ் சலேவை கைது செய்துள்ளனர். இது கத்தோலிக்க மக்களை ஏமாற்றவும் பிரிவினைவாத புலம்பெயர் விடுதலைப் புலிகளை மகிழ்விக்கவுமே இவரை கைது செய்துள்ளனர். தற்போது இவர் நோய்வாய்ப்பட்டுள்ளமைக்கு அரசாங்கம் முழுப்பொறுப்பை ஏற்கவேண்டும்.
![]()