உலக சந்தை விலையை விட அதிக விலைக்கு அரசு எரிபொருள் கொள்வனவு

அரசாங்கம் தனது தோல்விகளையும் முறைகேடுகளையும் மறைப்பதற்காக பழைய பொய்களைக் கூறி எதிர்க்கட்சியினர் மீது பழிசுமத்துவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவிக்கையில்,
உலக சந்தை விலையை விட ஒரு பீப்பாய்க்கு 45 டொலர் மேலதிகமாகச் செலுத்தி எரிபொருள் கொள்வனவு செய்யப்படுகிறது.
நட்பு நாடுகளுடன் பேசி குறைந்த விலைக்கு எண்ணெய் பெறுவோம் எனக் கூறி மக்களை ஏமாற்றிவிட்டு, தற்போது 45 டொலர் மேலதிகமாகச் செலுத்தி அதிக விலைக்கு வாங்கி அதன் சுமையை மக்கள் மீது சுமத்துகின்றனர்.
தரமற்ற நிலக்கரி இறக்குமதியால் ஏற்பட்ட நட்டத்தை ஈடுகட்டவே மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் திருட்டுகளை மறைக்கவே எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை மற்றும் ஏனைய அரச நிறுவனங்களை அச்சுறுத்தி, பழைய பொய்களை உண்மை என நிரூபிக்க அரசாங்கம் முயற்சிக்கிறது. காவல்துறை மா அதிபர் நாட்டுக்காகச் செயலாற்ற வேண்டுமே தவிர, ஒரு அரசியல் கட்சியின் தேவைக்காக அல்ல.
கொழும்பு துறைமுக நகரம் மற்றும் மத்தள விமான நிலையம் ஆகியவற்றின் முழுமையான பயனைப் பெற அரசாங்கம் தவறிவிட்டது. சர்வதேச முதலீட்டாளர்களை ஈர்க்க வரிச்சலுகைகளை வழங்கி நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும்.
ராஜபக்சக்கள் 18 பில்லியன் டொலர்களை திருடினார்கள் என அரசாங்கம் பொய் கூறுகிறது. 18 பில்லியன் டொலர் திருடப்பட்டதாகக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், இன்று மக்களின் அன்றாடப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாமல் திணறுகின்றனர்.
“அரசாங்கம் தனது கையாலாகத்தனத்தை மறைக்க எம்மீது சேறு பூசுவதை நிறுத்திவிட்டு, நாட்டின் தற்போதைய சவால்களை எதிர்கொள்ள முன்வர வேண்டும்,” என நாமல் ராஜபக்ச இதன்போது வலியுறுத்தினார்.
![]()