ஜனாதிபதி பாராளுமன்றத்தில் கூறிய விடயங்களின் உண்மை தன்மை – நாமல் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பாராளுமன்றத்தில் கூறிய விடயங்களின் உண்மை தன்மையை வெளிப்படுவதற்கு இன்னும் சிறிது காலம் இருக்கிறது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அரசாங்கத்தின் வேலைத்திட்டம் தொடர்பில் தாம் திருப்தியடைகின்றோமா இல்லையா என்பதை மக்கள் வெகுவிரைவில் வெளிப்படுத்துவர். உலகின் அனைத்து நாடுகளும் மத்திய கிழக்கு போர் பதற்றத்துக்கு தயாரான நிலையில், எமது அரசாங்கம் மாத்திரம் எவ்வித முன்னாயத்தங்களையும் மேற்கொள்ளவில்லை.
இதன் காரணமாகவே ஏனைய நாடுகளை விட அதிக விலையிலேயே இலங்கை, உலக சந்தையில் எரிபொருட்களை கொள்வனவு செய்கிறது.
கடந்த காலங்களில் திருகோணமலையில் எண்ணெய் தாங்கிகளை நிறுவிய போது அதனை எதிர்த்தனர். திரவ எரிவாயு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட போது அதனையும் எதிர்த்தனர். காற்றாளை மின்உற்பத்தி திட்டத்துக்கும் கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தி அதனை முற்றாக நிறுத்தச் செய்தனர். அன்று இந்த வேலைத்திட்டங்களுக்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருக்காவிட்டால், இன்று மின்கட்டண அதிகரிப்பிற்கான தேவை ஏற்பட்டிருக்காது.
இந்நிலையிலேயே தற்போது இந்த அரசாங்கம் தரம் குறைவான நிலக்கரியை இறக்குமதி செய்து மின்உற்பத்தியை 50 சதவீதத்தால் குறைத்துள்ளது. தற்போது அந்த சுமையும் மக்கள் மீது தான் சுமத்தப்படவுள்ளது.
மத்தள விமான நிலையம் தொடர்பில் தற்போது உலகம் அவதானிக்கிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள
வேண்டும். எனவே விமான சேவை நிறுவனங்களுடன் இது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து, பயன்பெறும் நடவடிக்கைகளை அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டும்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பாராளுமன்றத்தில் கூறிய விடயங்களின் உண்மை தன்மை வெளிப்படுவதற்கு இன்னும் சிறிது காலம் இருக்கிறது. ஈரான் கப்பல் தாக்குதலுக்குள்ளான போது, அது தாக்குதல் இல்லை என கடற்படை பேச்சாளர் குறிப்பிட்டார்.
ஆனால் சிறிது நேரத்தில் அமெரிக்கா தாமே அந்த தாக்குதலை நடத்தியதாக அறிவித்தது. அதேபோன்று அமெரிக்க போர் விமானங்கள் குறித்து ஜனாதிபதி தெரிவித்த கருத்தின் உண்மையான பின்னணியியும் விரைவில் வெளிப்படுத்தப்படும் என்றார்.
![]()