இலங்கை

யாழ்.பல்கலை விரிவுரையாளரின் சடலம் உருகுலைந்த நிலையில் அடையாளம்

யாழ்ப்பாணம் – அரியாலை, புங்கன்குளம் பகுதியில் உள்ள வீட்டில் இருந்து கடந்த இரு தினங்களுக்கு முன்னர் காணாமல் போன யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவத்துறை சிரேஷ்ட விரிவுரையாளரின் சடலம், தனங்கிளப்பு பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

21 வயது நிரம்பிய மருமகனால் கொலைசெய்து வீசப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்த பெண்ணின் உடலே அடையாளம் காணப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த விரிவுரையாளரான தனது தாயையும் தனது தங்கையையும், தங்கையின் கணவர் கடத்திச் சென்றதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் விரிவைரையாளரின் மகன் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து விசாரணைகள் செய்வதற்காக யாழ்ப்பாண பொலிசார் பாண்டியன்தாழ்வில் உள்ள அவர்களது வீட்டிற்கு சென்றனர்.

அங்கே வீட்டின் ஓடு கழற்றப்பட்டு கயிறு மூலம் வெளியேறியதற்கான ஆதாரமும், அறுக்கப்பட்ட தலைமுடி ஆதாரமும் காணப்பட்டது.

அதன் அடிப்படையில் அவர்கள் பரந்தன் பகுதியில் உள்ள ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் எடுத்தது தெரியவந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து திருகோணமலை பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் விரிவுரையாளரின் வாகனத்துக்கு எரிபொருளை நிரப்பியமை QR குறியீடு மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.

அந்தவகையில் அங்கு உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு தொடர்ச்சியாக விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், நேற்றையதினம் திருகோணமலை பகுதியில் வைத்து விரிவுரையாளரின் மகளான 19 வயதுடைய மனைவி மற்றும் 21 வயதுடைய கணவன் என இருவரையும் கைது செய்தனர்.

அதன்பின், அவர்களை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணைகளை மேற்கொண்ட நிலையில், விரிவுரையாளரான குறித்த பெண், மருமகனின் தாக்குதலின் போது உயிரிழந்த விடயம் தெரிய வந்துள்ளது.

மேலும் உயிரிழந்தவரது சடலத்தை எடுத்து சென்று யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் உள்ள ஒரு இடத்தில் வீசிவிட்டு இருவரும் சென்றதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அந்தவகையில் குறித்த சடலம் எங்கே வீசப்பட்டது என்பது தொடர்பான விசாரணைகளை பொலிசார் மேற்கொண்ட நிலையில், விரிவுரையாரின் சடலம் தனங்கிளப்பு பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *