திம்புக் கோட்பாட்டை மையப்படுத்தி யோசனை ”ஏக்கிய ராஜ்ஜிய”வை முற்றாக நிராகரிப்பு

புதிய அரசியலமைப்பு தொடர்பான கலந்துரையாடலில் கலந்து கொள்ள விரும்புகின்ற அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் போன்ற பல தரப்புகளுக்கும் தமிழ் தேசியப் பேரவையின் கதவு திறந்திருக்கும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
தமிழ் தேசியப் பேரவையினால் யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட புதிய அரசியல மைப்பு தொடர்பான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் கூறுகையில்,
தமிழ்த் தேசத்தினுடைய அரசியல் அபிலாஷைகளை பாதுகாப்பதற்கும் அதே நேரம் அந்த அரசியல் அபிலாஷைகளை முழுமையாக நிரூபிக்கக் கூடிய, அரசியல் தீர்வாக நிரூபிக்கக்கூடிய ,அரசியல் தீர்வை வலியுறுத்தக் கூடிய ஒரு கலந்துரையாடல் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்து விட்டது.
இக் கலந்துரையாடலில் ஏகமனதாக ஒரு சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. முதலாவதாக இந்த கலந்துரையாடலிலே கலந்து கொண்ட அத்தனை அமைப்புகளும், சிவில் சமூக செயற்பாட்டாளர்களும், அரசியல் கட்சிகளும், வெகுஜன அமைப்புகளையும் தாண்டி எதிர்காலத்திலும் இந்த முயற்சியிலேயே கலந்து கொள்ள விரும்புகின்ற அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் போன்ற பல தரப்புகளுக்கும் கதவு திறந்திருக்கும் என்ற ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டது.
இன்று (நேற்று)கலந்து கொண்ட அத்தனை அமைப்புகளும் நபர்களையும் உள்வாங்கி ஒரு பொதுச் சபையை உறுதிப்படுத்த முடிவு எடுக்கப்பட்டது. அந்த பொதுச் சபையில் இருந்து தமிழர்களுடைய அரசியல் அபிலாஷைகளான திம்பு கோட்பாடுகளை மையப்படுத்தி தமிழ் மக்கள் பூரண சாட்சி பெறக்கூடிய ஒரு பொது யோசனையை ஏகமனதாக முன்வைப்பதற்கு முடிவு எடுக்கப்பட்டது.
அந்த யோசனைகளை தயார் படுத்தும் நோக்கத்தோடு ஒரு குழு நியமிக்கப்படுவதற்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அந்த குழு ஒரு சில வாரங்களுக்குள்ளேயே இந்த பொதுச் சபையில் இருக்கக்கூடியவர்களின் திம்பு கோட்பாடுகளை பிரதிபலிக்கின்ற அந்த யோசனைகள் இருப்பதாக இருந்தால் அந்த குழுவுக்குள்ளே உருவாக்க வேண்டும் என்ற முடிவையும் எடுத்து, அத்துடன் வரப் போகும் ஒரு சில வாரங்களுக்குள் பொதுச் சபைக்கு அது தொடர்பில் மீண்டும் அறிக்கை சமர்ப்பிப்பது என ஏகமனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த வரப்போகும் ஒரு கிழமைக்குள் அல்லது பத்து நாட்களுக்குள் அந்த அரசியல் விவகார குழுவினுடைய பெயர் பட்டியல் இறுதி செய்யப்படும். அவையே இப்போதைக்காண முடிவுகள். எதிர்வரும் காலத்திலே நான் முன்பு சொன்னதைப் போன்று இந்த அமைப்புகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்களைக் கொண்ட இந்த பொதுச் சபை தொடர்ந்தும் கூடிக் கொண்டு இருக்கும்.
அரசியல் ரீதியாக செயல்பட வேண்டிய முடிவுகள் அந்த அந்த நேரத்திலே வந்து உருவாக்க வேண்டிய குழுக்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான முடிவுகள் அனைத்தும் பொது சபையால் மட்டுமே எடுக்கப்படும் என்ற இணக்கப்பாடும் எட்டப்பட்டிருக்கின்றது.
அந்த வகையிலே நாங்கள் ஏக்கியராஜ்ஜிய என்ற அரசியல் அமைப்பை நிராகரிப்பதற்கும், ஏகமனதாக எடுக்கப்பட்ட முடிவும் எங்களது அரசியல் அபிலாஷைகளை வலியுறுத்த வேண்டியதற்கு எவ்வகையானதொரு பொது யோசனைகளை முன் வைப்பதற்கான ஒரு நடைமுறை சார்ந்த செயற்பாட்டிற்கும் ஏகமனதாக இணங்கியது இது எங்களுடைய முயற்சிக்கு பூரண வெற்றி அளித்திருக்கின்றது. அதேவேளை;இந்தியாவுக்கான எமது விஜயமும் பூரண வெற்றியளித்துள்ளது என்றார்.
![]()