பஸ்களை மறித்து கஞ்சா பொதிகளை வைத்து போராட்டத்திற்கு வந்தவர்களுக்கு புலனாய்வுப் பிரிவால் அச்சுறுத்தல்

அம்பாறை மாவட்டத்திலிருந்து மட்டக்களப்புக்கு கறுப்பு சுதந்திர தின போராட்டத்திற்கு வந்தவர்களின் பஸ்களை மறித்து அதற்குள் கஞ்சா பொதிகளை வைத்து தம்மை அச்சுறுத்தும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுத்தாக அம்பாறை மாவட்ட வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி செல்வராணி தெரிவித்தார்.
நேற்று காலை திருகோவிலில் இருந்து இரண்டு பஸ்களில் வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மட்டக்களப்பு நோக்கிய பயணிக்கும்போது அக்கரைப்பற்றில் இராணுவ புலனாய்வுத்துறையினரால் மறிக்கப்பட்டது.
இதன்போது இராணுவ புலனாய்வுத்துறையினரும் பொலிஸ் உத்தியோகத்தரும் பஸ்ஸில் வேறு பொருட்கள் இருப்பதாக கூறி கஞ்சா பக்கட்டுகளை இரண்டு பஸ்களிலும் வைத்து தம்மை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இங்கு இருந்த புலனாய்வு உத்தியோகத்தர் ஒருவர் இரண்டு பஸ்களிலும் சிறிய கஞ்சா பக்கட்டுகளை வைத்து எடுத்துவிட்டு பஸ்ஸில் இருந்ததாக கூறி அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டதாகவும் காணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்
தம்மை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டதுடன் பெருமளவான பொலிஸாரும் புலனாய்வுத்துறையினரும் குவிக்கப்பட்ட போராட்டத்திற்கு செல்லுவோர் அச்சுறுத்தும் வகையிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
இதேபோன்று வேறு இடங்களிலிருந்து சிங்கள -தமிழ் இளைஞர்களையும் சிங்கள ஊடகவியலாளர்களையும் அழைத்துவந்து தமக்கு எதிரான செயற்பாடுகளையும் முன்னெடுத்ததாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.
![]()
