இலங்கை

சர்வதேச சட்டங்கள் அமெரிக்காவுக்கு விதிவிலக்காகியுள்ளன! சிறிநேசன் எம்.பி.

சர்வதேச சட்டம்,நாட்டின் இறைமை என்பதெல்லாம் கேள்விக்கு உள்ளாகியுள்ளன  என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மவாட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞனமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

இன்று ஊடகங்களுக்கு அவர் அனுப்பி வைத்துள்ள செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

உலகில் ஜநாயகமும், இறைமையும் கேள்விக் குறியாகவும், கேவலப் பொருட்களாகவும் மாறியுள்ளன. வெனிசுவெலா ஜனாதிபதி நிக்கலஸ் மதுராவும், அவரது மனைவியும் இறைமையுள்ள சொந்த நாட்டில், சொந்த வீட்டில் உறக்கத்தில் இருந்துள்ளார்கள்.

வல்லரசு நாடான அமெரிக்க ஜனாதிபதியின் படைகள் வான் தாக்குதலை மேற்கொண்டு அழிவுகளை ஏற்படுத்திய பின்னர், ஜனாதிபதியையும், மனைவியையும் கைது செய்து அமெரிக்காவுக்குத் கொண்டு சென்றுள்ளனர். இங்கு சர்வதேச சட்டம், நாட்டின் இறைமை என்பதெல்லாம் கேள்விக்கு உள்ளாகியுள்ளன.

‘வல்லவன் வாழ்ந்தான் வலுவிழந்தவன் வீழ்ந்தான்’ என்ற வலுவான வாக்குப் பலிதமாகியுள்ளது. சர்வதேச சட்டங்கள் அமெரிக்காவுக்கு விதிவிலக்காகியுள்ளன. எமது நாட்டுச் சட்டங்களால் பௌத்த பிக்குகளின் மத நடவடிக்களைக் கட்டுப்படுத்த முடியாதுள்ளன. இது எமது உள்நாட்டில் காணப்படுகிறது.

சர்வதேச ஒழுங்கில் இப்போது அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு சர்வதேச விதிமுறைகள் வதிவிலக்காகி உள்ளன. ஈராக்கை அமெரிக்கா தாக்கியபோது ஈராக்கில் அணுவாயுகங்களிருப்பதாகக் கூறியே தாக்குதலை நடாத்தியது. நாடு கைப்பற்றப்பட்டது. சதாம்ஹ_சைன் அமெரிக்கப் பொம்மை அரசினால் மரண தண்டனக்கு உள்ளாக்கப்பட்டார். ஆனால் ஈராக்கில் அணுவாயுதங்கள் கண்டு பிடிக்கவில்லை.

அமெரிக்க ஜனாதிபதிக்கு சர்வதேச சட்டம் எதுவும் செய்யவில்லை. இப்போது  போதைவஸ்து வியாபாரக் குற்றச்சாட்டில், அமெரிக்காவால் கைது செய்யப்பட்டுள்ளார். இனி அமெரிக்கா நினைத்தது போல்  மதுராவுக்குத் தீர்ப்பும் எழுதப்பட்டுவிடும். அமெரிக்காவின் ஆளுமையிலுள்ள ஐ.நா.சபை என்னதான் செய்யும்.வல்லவனை அந்த சபை வாழ்விக்கும், வலுவிழந்தவனை வீழ்விக்கும்.

ஸ்ரீலங்கா அரசு அத்துணை தூரம் வல்லமை இல்லாது விட்டாலும், பல நாடுகளின் வல்லமையைப் பெற்று தமிழீழ விடுதலைப் புலிகளை வீழ்ச்சியடையச் செய்தது. மனிதவுரிமை மீறல்கள் தொடர்பாக இதுவரை எந்த நியாயமும் கிடைக்கவில்லை.

நல்லவை அல்லாத வல்லவையும் வெல்லுகின்றன. நல்லவையானது வல்லமை இல்லாது விட்டால் அவையும் வீழத்தப்படுகின்றன. உலக ஒழுங்கு இலாபத்தின் பக்கமாகவும், சலுகைகளின் பக்கமாகவும் நகரு கின்றன. உரிமையின் பக்கமாகவோ, நியாயத்தின் பக்கமாகவோ நகர முடியவில்லை. இது நியாயமற்றதாக இருந்தாலும், யதார்த்தமாகியுள்ளது. என அவர் மேலும் அதில் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button