சுமைதாங்கி!…. கவிதை… ஜெயராமசர்மா

சுமை தாங்கியாக இருப்பார்கள் சிலபேர்
சுகம் பாரதுழைத்து கொடுப்பார்கள் அவரும்
எதிர் பாராதிருந்து எல்லாமே செய்வார்
சுகம் பெற்றாரெல்லாம் திரும்பியே பாரார்
உண்ணாம லிருப்பார் உறங்காம லிருப்பார்
கண்ணயராது இருப்பார் கையணைத்து மிருப்பார்
மண்மீது மற்றவர் படுந்துன்பம் தாளார்
எண்ணியே எண்ணியே எல்லாமும் செய்வார்

இல்லறத்தி லிருப்பார் நல்லறமே நினைப்பார்
சொல்லாலும் செயலாலும் துயரகற்றி நிற்பார்
இல்லறத்தி லிணையாமல் இருந்தாலும் இருப்பார்
இடர்கண்ட போதவர்கள் இரங்கியே நிற்பார்
சமயமும் பாரார் சாதிகளும் பாரார்
சமுத்துவமா யனைவரையும் தாமமரும் நினைப்பார்
நினைவதனில் உதவுவதை நிலையாக வைப்பார்
நீள்நிலத்தி லவரென்றும் சுமைதாங்க வருவார்
குடும்பத்தில் சுமைதாங்கி ஆகிறார் பலபேர்
குவலயத்தில் சுமைதாங்கி ஆகிறார் பலபேர்
உயிர்கெல்லாம் சுமைதாங்கி ஆகிறார் ஒருவர்
உருவமாய் அருவமாய் ஒளிர்கிறார் உயர்வாய்
நம்பிக்கை நமக்கென்றும் சுமைதாங்கி ஆகும்
நம்பிக்கை ஊட்டுவார் சுமைதாங்கி ஆகிறார்
பெற்றவரும் ஊட்டுகிறார் மற்றவரும் ஊட்டுகிறார்
பேருலகில் இறையுணர்வே பெருமைமிகு நம்பிக்கை

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், அவுஸ்திரேலியா
![]()
சுமைதாங்கியாய் சிலர் வாழ்ந்தார். அதனால் பல சுயநலமிகள் பிழைத்தார். இன்றும் நல்லமழை பெய்வது இவர்களால் தான். உலகைக் காக்கும் உயர்ந்தோர் கவிதை நன்று. சுகம் பெற்றவர் திரும்பிப் பார்க்கவில்லை என்றால்தான் என்ன? தங்கள் கவிதையில் காலம் முழுவதும் நிலைத்துவிட்டார்.
அருமையான பதிவு