இந்தியாவில் ரயில் விபத்து – 10 பேர் பலி

இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் ரயில் நிலையம் அருகே பயணிகள் ரயில் ஒன்று சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானதில், பயணிகள் பலரும் காயமடைந்துள்ள நிலையில், சுமார் 10 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இன்று மாலை சுமார் 4 மணியளவில் (16:00 மணி), கோர்பாவிலிருந்து பிலாஸ்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த MEMU பயணிகள் மின்சார ரயில், லால் கடான் அருகே நின்றிருந்த சரக்கு ரயில் மீது மோதியது.
மோதலின் வேகத்தில் பயணிகள் ரயிலின் ஒரு பெட்டி சரக்கு ரயிலின் பெட்டி மீது ஏறி, அதன் முன்பகுதி கடுமையாகச் சேதமடைந்தது. இதன் காரணமாகப் பயணிகள் பெட்டிகள் சில தடம் புரண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் குறைந்தது 10 வரை பலியாகியிருக்கலாம் என்றும், பலர் காயமடைந்துள்ளதாகவும் ரயில்வே மற்றும் பொலிஸ் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் சிலர் ரயில் பெட்டிக்குள் சிக்கியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன், ரயில்வே பாதுகாப்புப் படை, உள்ளூர் பொலிஸ் மற்றும் ரயில்வே மீட்புக் குழுவினர் உடனடியாகச் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். காயமடைந்தவர்களுக்கு அவசர மருத்துவ உதவி அளிக்கப்பட்டு, அருகிலுள்ள வைத்தியசாலைகளுக்கு மாற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
விபத்து காரணமாக அந்த ரயில் பாதையில் மின்சார இணைப்புகள் மற்றும் சிக்னல் அமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதால், ரயில் சேவைகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளன அல்லது மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.
விபத்துக்கான சரியான காரணம் குறித்து ரயில்வே நிர்வாகம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
![]()