கொலைக்குப் பின்னால் அரசு!; சந்தேகம் எழுகின்றது என்கிறார் ஹக்கீம்

வெலிகம பிரதேச சபை தவிசாளரின் கொலைக்கு பின்னால் அரசாங்கத்தின் தொடர்புகள் இருக்கின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது ஏனெனில் இந்த பிரதேச சபை தவிசாளரின் நியமனம் இடம்பெறுகின்ற தினத்தில் அவருக்கு சார்பாக வாக்களிக்க இருந்தவர்களை கடத்திச் சென்று தடுத்து வைத்திருந்த விவகாரத்திலும் அரசாங்கத்தின் மீதும் சந்தேகம் எழுந்திருந்தது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் எம்.பி.யுமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் 2451/ 10 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட கட்டளை மற்றும் (52ஆம் அத்தியாயமான) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழான விதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
நாட்டில் இன்று அரசியல்வாதிகளின் உயிருக்கும் மாத்திரமல்லாது பொது மக்களின் உயிருக்கும் பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. வெலிகம பிரதேச சபை தவிசாளரின் கொலை எல்லோரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.அதனால் இந்த கொலை சம்பவம் தொடர்பில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் பாராளுமன்றத்துக்கு தெளிவுபடுத்த வேண்டும். பட்டப்பகலில், திறந்த வெளியில் அலுவலகத்திற்குள் நுழைந்து பிரதேச சபை தவிசாளர் ஒருவரை கொலை செய்கின்ற விடயம் சாதாரண விடயமல்ல.
குறிப்பாக இந்த பிரதேச சபை தவிசாளரின் நியமனம் இடம்பெறுகின்ற தினத்தில் அவருக்கு சார்பாக வாக்களிக்க இருந்தவர்களை கடத்திச் சென்று தடுத்து வைத்திருந்த விவகாரத்திலும் அரசாங்கத்தின் மீதும் சந்தேகம் எழுந்திருந்த பின்னணியில் இவ்வாறு கொலை இடம்பெற்றிருப்பதில் அரசியல் ரீதியாக இதற்கு சம்பந்தம் இருக்கிறதா எனப் பார்க்க வேண்டி இருக்கிறது. ஏற்கனவே இந்த கொலை சம்பவத்தை திசை திருப்புவதற்காக வேறு காரணங்களை தெரிவித்து, கொலையுண்டவரை அவமானப்படுத்தும் வகையில் சில ஊடகங்கள் செயற்படுகின்றன.அதனால் இந்த நடவடிக்கைகளுக்கு பின்னால் அரச தரப்பினரும் இருக்கிறார்களா என்ற சந்தேகம் எழுகிறது.
அதனால் இவ்வாறான சூழலில் இதுதொடர்பில் நடவடிக்கை எடுப்பது மாத்திரமல்லாது, நீதிமன்றத்துக்குள் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்திற்குரிய பெண் ஒருவரை வெளிநாட்டில் கைது செய்து நாட்டுக்கு கொண்டு வந்து விசாரணைகளை மேற்கொள்வதுபோல், இந்த கொலை சம்பவத்துடன் சம்பந்தப்பட்டவர்களையும் விரைவாக கைது செய்து சட்டத்துக்குமுன் நிறுத்தவேண்டும் என்றாார்.
![]()