முச்சந்தி

தமிழ் அரசுக் கட்சியை அழித்து விடலாம் என்பது பகல் கனவே – சி.வீ.கே.சிவஞானம்

எங்கள் கட்சி கொள்கையான சமஷ்டி வழிக்கு வந்த கஜேந்திரகுமாருக்கு நன்றி. சமஷ்டியை நாங்கள் விட்டுக்கொடுக்கவில்லை. தமிழ் அரசுக் கட்சியை மலினப்படுத்தி அழித்து விடலாம் என்பது பகல் கனவே என தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில்  இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த சி.வீ.கே. சிவஞானம்,

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் 13 ஆம் திருத்தத்தையும் அரசியலமைப்பையும் குழப்பி ஏக்ய ராஜ்ய மற்றும் ஒற்றையாட்சி என இரண்டையும் கூறுகிறார். அது 38 வருடமாக தோல்வியடைந்த முறை என சொல்கிறார்.

மாகாண சபை சட்டத்தின் மூலம் தான் தற்போது உள்ள உள்ளூராட்சி சபைகள் முறைமை காணப்படுகின்றது. நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கஜேந்திரகுமாரின் கட்சியும் போட்டது. அது ஒற்றையாட்சி இல்லை என சொல்கிறாரா என விளங்கவில்லை.

கஜேந்திரகுமார் முடக்கம் முடக்கம் என சொல்கிறார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு கடிதம் எழுதி முடக்க கூடாது என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறுகிறார்.

எங்களைப் பொறுத்தவரையில் 87 க்கு முன்னர் பாராளுமன்ற கட்டமைப்புக்கு பிறகு உள்ளூராட்சி சபை முறைமை தான் காணப்பட்டது. 1988 க்கு பின்னர் 13 ஆம் திருத்த சட்ட மூலம் ஒரு கட்டமைப்பாக மாகாண சபை கொண்டுவரப்பட்டது. பாராளுமன்றுக்கு அடுத்ததாக உப சட்டவாக்க அலுவலகமாக அது காணப்பட்டது.

13 ஆம் திருத்தமும் மாகாண சபையும் எமது அரசியல் அபிலாசைகளுக்கு தீர்வு அல்ல. எமது கட்சியின் நிலைப்பாடும் அதுவே. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரின் அறிக்கை உள்ளக விசாரணையை வலியுறுத்துவது எமக்கு ஏமாற்றமளிக்கிறது என கடிதத்தில் சொல்லியிருக்கிறோம். இந்த கடிதம் நானும் சுமந்திரனும் மட்டும் கையொப்பம் வைத்து அனுப்பிய கடிதம் அல்ல. எமது கட்சியின் எட்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் கையொப்பம் வைத்துள்ளனர்.

சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வலியுறுத்த வேண்டும் என ஐ.நா.வுக்கு கடிதம் எழுதியுள்ளோம். பிறகு எவ்வாறு தமிழ் அரசுக் கட்சி சமஷ்டியை கைவிட்டு விட்டதாக கூறமுடியும்.

ஏக்ய ராஜ்ய பாராளுமன்றத்துக்கு கொண்டு வரப்பபட்டால் இலங்கை தமிழ் அரசுக் கட்சி எதிர்த்து வாக்களிக்கும். அதேவேளை, ஏக்ய ராஜ்ய ஒற்றையாட்சியும் அல்ல சமஷ்டி ஆட்சியும் அல்ல என்பதை திட்டவட்டமாக தெரிவித்து கொள்கிறோம். ஒருமித்த நாடு என்றால் ஒரு நாடா? ஒன்றுக்கு மேற்பட்டவையையே ஒருமித்த நாடு என்பார். தமிழ் அர்த்தத்தை விட்டு சிங்களத்தை பிடித்து கொண்டிருக்கிறார்கள்.

எனக்கு போதியஅறிவு இருக்கிறது. எனக்கு விளங்காது என கஜேந்திரகுமார் நினைப்பது பொருத்தமற்றது. 1988 நவம்பரில் நிறைவேற்றப்பட்ட சட்ட மூலம் மாகாண சபை நடைமுறையில் உள்ளது தானே.

அண்மையில் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவீர்களா என ஊடகவியலாளர்கள் கேள்வி கேட்டபோது இல்லை கேட்க மாட்டோம் என சொல்லி இருக்கலாம் தானே. அங்கு நான் முதல்வர், உறுப்பினர் என போட்டியிடுகின்றனர். போட்டியிடுவது பற்றி தெளிவாக சொல்லலாமே ஏன் மழுப்புகின்றார்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது எனக்கு தனிப்பட்ட மதிப்பு இருக்கிறது. அதை பேண விரும்புகிறேன். எங்கள் கட்சி கொள்கையான சமஷ்டி வழிக்கு வந்த கஜேந்திரகுமாருக்கு நன்றி. சமஷ்டியை நாங்கள் விட்டுக்கொடுக்கவில்லை.

தமிழ் அரசுக் கட்சியை மலினப்படுத்தி அழித்து விடலாம் என்பது பகல் கனவே. தந்தை செல்வா போய் விட்டார். நாங்களும் போய் விடுவோம். ஆனால் தமிழ் அரசுக் கட்சி பலமாக தொடர்ந்து தமிழ் மக்கள் நலனுக்கு குந்தமிழைக்காத வகையில் செயற்படும். எங்களை அடிப்பதில் மினக்கெடாமல் செயற்படுங்கள். என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button