முச்சந்தி

போதைப்பொருளுக்கு அடிமையானோருக்கு வடக்கு மாகாணத்தில் புனர்வாழ்வு நிலையம்

வடக்கு மாகாணத்தில் உயிர்க்கொல்லிப் போதைப்பொருளுக்கு அடிமையானோருக்குப் புனர்வாழ்வு வழங்கும் வகையில் இந்த ஆண்டு இறுதிக்குள் ஏதாவது ஓரிடத்தில் புனர்வாழ்வு நிலையத்தை ஆரம்பிப்பது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தில் உயிர்கொல்லி போதைப்பொருளுக்கு அடிமையாவோருக்கு புனர்வாழ்வு வழங்கும் வகையில் புனர்வாழ்வு நிலையம் அமைத்தல் மற்றும் உதவிநாடும் நிலையம் அமைப்பது தொடர்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பில் மீளாய்வு நடவடிக்கை நேற்று வியாழக்கிழமை யாழ்.சுண்டுக்குளியிலுள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாணப் பிரதம செயலாளர், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாணச் சுகாதார அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாணச் சிறுவர் நன்னடத்தை திணைக்கள ஆணையாளர், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர், யாழ்.மாவட்டச் செயலாளர், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்ட மேலதிக செயலாளர்கள், யாழ்ப்பாணப் பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர், தேசிய ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர்.

தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் பணிப்பாளர் நாயகத்தின் பங்கேற்புடன் கடந்த ஜூலை மாதம் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் கலந்துரையாடல் நடைபெற்றிருந்தது. அதன்போது ஆராயப்பட்ட விடயங்களின் முன்னேற்றம் தொடர்பில் நேற்றைய கலந்துரையாடலில் விரிவாக ஆராயப்பட்டது.

புனர்வாழ்வு நிலையத்தை நிரந்தரமாக அமைப்பதற்கு யாழ்ப்பாணம் மருதங்கேணிப் பிரதேச செயலாளர் பிரிவில் காணி ஒதுக்கப்பட்டு இது தொடர்பான கடிதம் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் பணிப்பாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்டச் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.

புனர்வாழ்வு நிலையம் நிரந்தரமாக அமைக்கப்படும் வரையில் கிளிநொச்சி கிருஸ்ணபுரத்தில் அல்லது முல்லைத்தீவில் இயக்குவது தொடர்பில் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் அங்குள்ள கட்டடங்கள் தொடர்பில் முழுமையான ஆய்வை மேற்கொள்வதற்காகத் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் குழுவினரும், வடக்கு மாகாணச் சுகாதார அமைச்சின் கீழான குழுவினரும் இணைந்து விரைந்து களப் பயணம் மேற்கொள்வது எனவும், இந்த ஆண்டு இறுதிக்குள் ஏதாவது ஓரிடத்தில் புனர்வாழ்வு நிலையத்தை ஆரம்பிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் குருநகரிலும், முல்லைத்தீவில் ஒட்டுசுட்டானிலும், மன்னாரில் முருங்கனிலும் உள்ள வைத்தியசாலைகளில் உதவிநாடும் நிலையங்கள் அமைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. குருநகர் மருத்துவமனையின் திருத்த வேலைகள் நிறைவுறுவதற்கு கால அவகாசம் தேவை என்பதால் அதுவரையில் பிறிதொரு வைத்தியசாலையில் உதவிநாடும் நிலையம் அமைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஒட்டுசுட்டான் மற்றும் முருங்கன் வைத்தியசாலைகள் தயார் நிலையில் உள்ளமையால் அவற்றில் உடனடியாக உதவிநாடும் நிலையங்களை ஆரம்பிப்பதற்கு வடக்கு மாகாண ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.

மேலும், பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை கடுமையாக அதிகரித்துள்ளதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் தன்னை நேற்று(நேற்று முன்தினம்) புதன்கிழமை சந்தித்த மாணவர்கள் இதுதொடர்பில் பல்வேறு விடயங்களை வெளிக்கொண்டு வந்ததாகவும் குறிப்பிட்டார். எனவே, விழிப்புணர்வுச் செயற்பாடுகளை விரிவுபடுத்த வேண்டிய தேவைப்பாட்டை வடக்கு மாகாண ஆளுநர் வலியுறுத்தினார். சில பாடசாலைகள் விழிப்புணர்வுச் செயற்பாட்டுக்கு ஒத்துழைக்காமை தொடர்பாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது. அவ்வாறு எந்தவொரு பாடசாலையும் ஒத்துழைக்காமல் இருக்க முடியாது எனத் தெரிவித்த வடக்கு மாகாண ஆளுநர் அதுதொடர்பில் இறுக்கமான அறிவுறுத்தல்களை வழங்குமாறு வடக்கு மாகாணப் பிரதம செயலாளருக்குப் பணிப்புரை விடுத்தார்.

அதேநேரம் ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வுச் செயற்பாடுகள், மாகாண மற்றும் மத்திய அரசாங்கங்களின் கீழ் பணியாற்றும் பொருத்தமான கள உத்தியோகத்தர்களுக்கான பயிற்சிகள் ஆகியவற்றைத் தொடர்ந்து முன்னெடுக்கவும், இதுதொடர்பான ஒழுங்குபடுத்தப்பட்ட அறிவுறுத்தல்களை வழங்கவும் வடக்கு மாகாணப் பிரதம செயலாளரை வடக்கு மாகாண ஆளுநர் அறிவுறுத்தினார்.

பாடசாலை இடைவிலகல் தொடர்பான தகவல்கள் உரிய நேரத்துக்கு உரிய திணைக்களங்களுக்குப் பகிரப்படுவது தொடர்பான பொறிமுறையை உருவாக்குவது தொடர்பாகவும் ஆராயப்பட்டது. மேலும், போதைப்பொருள் தொடர்பான விழிப்புணர்வுச் செயற்பாட்டை முன்னெடுக்கும் அரச சார்பற்ற நிறுவனங்கள், திணைக்களங்களின் கண்காணிப்பில் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான ஒழுங்குகளைச் செய்யுமாறும் வடக்கு மாகாண ஆளுநரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அதேநேரம் சில வலி நிவாரணிகளை உயிர்கொல்லிப் போதை மாத்திரைகளாகப் பயன்படுத்துவது தொடர்பில் கடந்த கூட்டங்களில் ஆராயப்பட்டிருந்தது. இதுதொடர்பில் மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களிடம் கண்காணிப்பை இறுக்குவது தொடர்பில் யாழ்ப்பாணப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. இதுதொடர்பில் முன்னேற்றகரமான நிலைமை காணப்படுவதால் வடக்கின் ஏனைய நான்கு மாவட்டங்களிலும் இதே நடைமுறையைப் பின்பற்றுவதற்குரிய ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு வடக்கு மாகாணச் சுகாதார சேவைகள் பணிப்பாளரை வடக்கு மாகாண ஆளுநர் அறிவுறுத்தினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *