பலதும் பத்தும்

’’பானிபூரி’’க்காக வீதியில் அமர்ந்து அழுது போராடிய பெண்

இன்றைய நுகர்வு கலாச்சாரத்தில் மக்கள் அதிகளவு மோசடிகளை சந்திக்கிறார்கள். ஆன்லைன், ஆஃப்லைன் எல்லாவற்றிலும் மக்களை ஏமாற்றும் செயல் அரங்கேறி கொண்டு தான் இருக்கிறது. அதுவும் உணவை வைத்து நடைபெறும் மோசடிகள் மிகவும் அதிகம். குஜராத்தில் 6 பானிபூரிக்கு பதிலாக 4 பானிபூரி மட்டுமே கொடுத்தாக கூறி பெண் ஒருவர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட வீடியோ வைரலாகி வருகிறது. காவல்துறையினர் அந்தப் பிரச்சனையை எப்படி சமாளித்தார்கள்.

வாழ்க்கை என்பதே போராட்டம் தான். மக்களின் அடிப்படை பிரச்சனைகள் தொடங்கி பலவற்றுக்காக போராட்டம் நடத்துவது வழக்கம். சில நேரங்களில் மக்கள் ஆங்காங்கே நூதன போராட்டங்களை நடத்துவார்கள். பல முக்கிய பிரச்சனைகளுக்காக மக்கள் நடத்தும் போராட்டங்கள் கூட பெரியளவு கவனம் ஈர்க்காது. அதேநேரத்தில் சாதாரண விஷயத்திற்கு நடத்தும் போராட்டம் பெரிய கவனத்தை ஈர்க்கும்.

இந்தியா முழுவதுமே சாலையோர உணவுக் கடைகள் அதிகம். அதிலும் பானிபூரி கடைகள் இந்தியா முழுவதுமே பிரபலமாகி வருகிறது. இந்நிலையில் குஜராத் மாநிலம், வதோதரா அருகே உள்ள சுர்சாகர் ஏரி பகுதியில் ஒரு பானிபூரி கடை உள்ளது. அந்தக் கடைக்கு தினசரி ஏராளமான மக்கள் பானிபூரி சாப்பிட செல்வது வழக்கம். கடைக்காரர் ரூ.20க்கு 6 பானிபூரிகளை விற்பனை செய்து வருகிறார்.

கூட்டம் அதிகளவு இருந்ததால், கடைக்காரர் ஒரே நேரத்தில் அந்தப் பெண் உள்பட பலருக்கு பானிபூரி கொடுத்துள்ளார். பெண்ணும் பானிபூரியை ரசித்து ருசித்து சாப்பிட்டுள்ளார். தொடர்ந்து கடைக்காரர் அங்குள்ள ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக பானிபூரி கொடுத்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் அவர் பெண்ணிடம் உங்கள் பானிபூரி கணக்கு முடிந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்.

இதைக் கேட்டு பெண் அதிர்ச்சியடைந்துள்ளார். 6 பூரியில் எனக்கு 4 பூரி தான் கிடைத்துள்ளது. என்று கூறியுள்ளார். அதற்கு கடைக்காரர், இல்லை உங்களுக்கு பூரி கொடுத்துவிட்டேன் என்று சொல்லியுள்ளார். இதன் காரணமாக 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கடைக்காரர், அதெல்லாம் தெரியாது. 6 பூரி முடிந்துவிட்டது. என்று கறாராக கூறியுள்ளார்.

இதனால் வேதனையடைந்த பெண் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். வாகனங்கள் அதிகளவு சென்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அந்தப் பெண்ணை சுற்றி மக்கள் கூட்டம் கூடியது. கடைக்காரர், வாகன ஓட்டிகள் உள்ளிட்டோர் அவரிடம் பேசியும், தனக்கு 4 பூரி தான் கிடைத்துள்ளது என்று அவர் போராட்டத்தைத் தொடர்ந்துள்ளார்.

தகவலறிந்து வந்த காவல்துறையினர் பெண்ணிடம் பேசினார்கள். உடனே அவர் அழுதபடி நான் 6 பூரிக்கு பணம் கொடுத்துவிட்டேன். அவர் 4 தான் கொடுத்துள்ளார். பாக்கியுள்ள 2 பூரிகளை கொடுக்க சொல்லி முறையிட்டார். மறுபக்கம் கடைக்காரரும் பிடிவாதமாக இருந்ததால் காவல்துறையினர் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து போயுள்ளனர். பிறகு ஒருவழியாக அந்த பெண்ணை சமாதானப்படுத்தி அனுப்பினார்கள்.

இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. பலர் இதற்கெல்லாமா போராட்டம் நடத்துவார்கள் என்று கருத்து கூறி வருகிறார்கள். சிலர் அந்தப் பெண் கேட்டதில் தவறில்லையே என்று அவருக்கு ஆதரவாகவும் பேசி வருகிறார்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button