முச்சந்தி

தமிழருக்கு நீதி மறுப்பு ஜெனீவாவில் ஆரம்பம்

இலங்கையில் மாறி மாறி ஆட்சி செய்த அரசுகளினால் தமிழ் மக்களுக்கான நீதி மறுக்கப்பட்டே வந்துள்ளது.அந்த வகையில் தமிழ் மக்களுக்கான நீதி மறுப்பை தேசிய மக்கள் சக்தி அரசின் வெளிவிவகார அமைச்சர் ஜெனீவாவில் ஆரம்பித்து வைத்துள்ளார் என தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. இரா. சாணக்கியன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  இடம்பெற்ற இலங்கைக்கும்,ஐக்கிய அரபு இராச்சியத்துக்கும் இடையிலான பல்துறை ஒப்பந்தம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

ஜெனீவாவில் இடம்பெற்ற 60 ஆவது அமர்வில் இலங்கை வெளி விவகார அமைச்சர் அளித்த பதில் தமிழ் மக்களை ஏமாற்றத்துக்குள்ளாக்கியுள்ளது.இலங்கையில் சர்வதேச நாடுகள் தலையிட முடியாது என்ற வெளி விவகார அமைச்சரின் அறிவிப்பு தமிழ் மக்களின் கோரிக்கைகளை,தமிழ் மக்களுக்கான நீதியை முற்றாக நிராகரிப்பதாகவே அமைந்துள்ளது.

இலங்கையில் மாறி மாறி ஆட்சி செய்த அரசுகளினால் தமிழ் மக்களின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டே வந்துள்ளன. தமிழ் மக்களுக்கான நீதி மறுக்கப்பட்டே வந்துள்ளது.அந்த வகையில் தமிழ் மக்களுக்கான நீதி மறுப்பை தேசிய மக்கள் சக்தி அரசின் வெளிவிவகார அமைச்சர் ஜெனீவாவில் ஆரம்பித்து வைத்துள்ளார்.

தமிழ் மக்களுக்கான விளையாட்டு மைதானங்களை, அபிவிருத்திகளை ஜனாதிபதி ஆரம்பித்து வைக்கின்றார். ஜனாதிபதிகளாகவிருந்த மஹிந்த, மைத்திரி,ரணில் ஆகியோரும் இதனை செய்தனர். ஆனால் தமிழ் மக்கள் கேட்பது இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணை.தமக்கான அரசியல் உரிமை.

தமிழ் மக்களின் உரிமைகளை பறித்தெடுத்தது போன்று இன்று மலையக தமிழ் மக்களின் உரிமைகளையும் பறிக்க முற்படுகின்றீர்கள். அதில் ஒன்றுதான் மலையக அதிகாரசபை பறிப்பு முயற்சி.அதில் அரசு கைவைக்கக் கூடாது என்று நாமும் வலியுறுத்துகின்றோம் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *