இந்தியா

இந்தியாவில் வீடுகளை அடித்துச் சென்ற பெருவெள்ளம் – அதிர்ச்சி வீடியோ

உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள தாராலி கிராமத்தில்  (ஆகஸ்ட் 5) மேக வெடிப்பால் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. இதில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

உத்தராகண்டின் உத்தரகாசி மாவட்டத்தின் மலைப்பகுதியான தாராலி கிராமத்தில் இன்று மேக வெடிப்பால் ஏற்பட்ட வெள்ளத்தில் பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன.

இப்பகுதியில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள மாநில பேரிடர் மீட்புப் படை சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. கீர் கங்கா நதியின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் மேக வெடிப்பால் மிகப் பெரிய வெள்ளம் ஏற்பட்டது.

இது குறித்து உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறுகையில், “தாராலி [உத்தரகாசி] பகுதியில் மேக வெடிப்பு காரணமாக ஏற்பட்ட பெரும் இழப்புகள் குறித்த செய்தி மிகவும் வருத்தமாகவும் வேதனையாகவும் உள்ளது.

தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை, மாவட்ட நிர்வாகக் குழுக்கள் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருகின்றன.

இது தொடர்பாக மூத்த அதிகாரிகளுடன் நான் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன், நிலைமை உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகிறது. அனைவரின் பாதுகாப்புக்காக நான் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன்.” என்று கூறினார்.

இதுகுறித்து இந்திய ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், “ஹர்சிலுக்கு அருகிலுள்ள கீர் காட் பகுதியில் தாராலி கிராமத்தில் ஒரு பெரிய மண்சரிவு ஏற்பட்டது, இதனால் குடியிருப்பு வழியாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

ஐபெக்ஸ் படையினர் உடனடியாக வரவழைக்கப்பட்டுள்ளனர். சேதத்தின் அளவு கண்டறியப்பட்டு வருகிறது. இந்த இயற்கை பேரிடரின் போது மக்களுக்கு ஆதரவாக ராணுவம் உறுதியாக நிற்கும்” என்று தெரிவித்தது.

இந்த நிலையில், இடிபாடுகளுக்குள் சுமார் 10-12 பேர் புதைந்திருக்கலாம் என்று கிராமவாசி ராஜேஷ் பன்வார் தெரிவித்தார். 20-25 ஹோட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகள் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button