பலதும் பத்தும்

11 இலட்சம் ரூபாய் காசோலை வழங்கி மோசடி

மட்டு. ஏறாவூரில் முந்திரி பருப்பு வர்த்தகரிடம் ஒருவர் காசோலையை வழங்கி 11 இலட்சம் ரூபாவுக்கு முந்திரிகை பருப்பை கொள்வனவு செய்து கொண்டு, வழங்கிய காசோலைக்கான பணத்தை வழங்காது மோசடி செய்த ஒருவரை ஏறாவூர் பிரதேசத்தில் வைத்து மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவினர் கைது செய்தனர்.

குறித்த பிரதேசத்தில் முந்திரி பருப்பு வர்த்தகத்தில் ஈடுபடும் ஒருவரிடம் அந்த பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் திகதி ஒன்று இடப்பட்டு 11 இலட்சம் ரூபாய் காசோலை ஒன்றை வழங்கி அந்த தொகைக்கான முந்திரி பருப்பை கொள்வனவு செய்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த திகதியில் முந்திரி பருப்பை கொள்வனவு செய்தவர் வழங்கிய காசோலையை கொடுத்து பணத்தை பெற்றுக் கொள்வதற்காக வங்கிக்கு சென்று காசோலையை வழங்கிய போது அந்த காசோலைக்கான பணம் வங்கியில் வைப்பில் இல்லாததையடுத்து காசோலை திரும்பியது.

இதனையடுத்து திரும்பிய காசோலைக்கான பணத்தை குறித்த நபரிடம் தொடர்பு கொண்டு வாங்க முயற்சித்த போதும் அது முடியாததையடுத்து மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவிடம் காசோலை மோசடி தொடர்பாக குறித்த நபருக்கு எதிராக முறைப்பாடு செய்தார்.

இச்சம்பவம் தொடர்பாக காசோலையை வழங்கிய நபரை கடந்த 07 ஆம் திகதி ஏறாவூரில் வைத்து கைது செய்து  ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவர் குற்றத்தை ஒப்பு கொண்டு அதற்கான பணத்தை வழங்குவதாக நீதிமன்றில் அறிவித்ததையடுத்த அவரை அடுத்த வழக்கிற்கான திகதியிடப்பட்டு அன்றைய தினம் நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு அவரை பிணையில் செல்வதற்கு நீதவான் அனுமதியளித்து பிணையில் விடுவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button