பலதும் பத்தும்

கார் சாரதிகளை குறிவைத்து வேட்டையாடிய கொடூர சீரியல் கில்லர்

24 வருடங்களுக்கும் மேலாக பொலிஸாரிடமிருந்து தப்பி வாழ்ந்த ஒரு கொடூரமான சீரியல் கில்லர் கொலையாளி டெல்லி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் அஜய் லம்பா (48) என்று அடையாளம் காணப்பட்டார். இவர் 24 ஆண்டுகளுக்கு முன்பு டெல்லி, உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களில் பரபரப்பை ஏற்படுத்திய நான்கு கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் முக்கிய குற்றவாளி.

அஜய் லம்பாவின் குற்றங்களைச் செய்யும் முறை மிகவும் துல்லியமானது. அவர் தனது நண்பர்களுடன் உத்தரகண்ட் செல்ல ஒரு காரை வாடகைக்கு எடுப்பார். வழியில், அவர் சாரதியை போதைப்பொருள் கொடுத்து கொன்றுவிடுவார். அதன் பிறகு, யாரும் கண்டுபிடிக்காதபடி உடலை ஒரு தொலைதூர மலைப்பாங்கான பகுதியில் வீசி, காரை எடுத்து நேபாள எல்லையைக் கடந்து அங்கு விற்றுவிடுவார். 2001 ஆம் ஆண்டில், இந்த கும்பல் பல சாரதிகளை இந்த வழியில் கொன்றது.

அவரது கும்பலைச் சேர்ந்த மேலும் இருவர் கடந்த காலங்களில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

லம்பா, உத்தரபிரதேசத்தின் பரேலியில் தீரேந்திரா மற்றும் திலீப் நேகி என்ற இரண்டு நபர்களுடன் இந்தக் கொலைகளைச் செய்தார். கொலைகள் மற்றும் கொள்ளைகளைத் தவிர, சட்டவிரோதமாக ஆயுதங்களை வைத்திருந்தது மற்றும் திருட்டு வழக்குகளும் அவர் மேல் உள்ளன. பொலிஸாரிடமிருந்து தப்பிக்க 2008 முதல் 2018 வரை பத்து ஆண்டுகள் நேபாளத்தில் தலைமறைவாக இருந்தார். பின்னர் அவர் தனது குடும்பத்துடன் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனுக்கு குடிபெயர்ந்தார்.

சமீபத்தில் கஞ்சா விற்பனை வழக்கில் சிக்கிய பின்னர் லம்பாவின் உண்மை அடையாளம் தெரியவந்தது. லம்பா தற்போது நான்கு கொலை வழக்குகளை எதிர்கொண்டாலும், அவர் மேலும் பல குற்றங்களைச் செய்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button