அன்னவாசல் அருகே அரசு பள்ளியில் மாணவர் தேர்தல்

ஜூன் 27. தமிழ்நாடு புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே பரம்பூர் காரசூராம்பட்டி அரசு ஆரம்பப் பள்ளியில் மாணவர் தேர்தல் பரபரப்பாக நடந்து முடிந்தது.
அன்னவாசல் ஒன்றியம் பரம்பூர் ஊராட்சி காரசூராம்பட்டியில் அரசு ஆரம்பப்பள்ளி உள்ளது. இங்கு மாணவர்களின ஆளுமையை வளர்க்கும் விதமாக ஆண்டுதோறும் மாணவர் தேர்தல் நடைபெற்று வருகிறது. இப்பள்ளியில் இருபத்து ஏழு மாணவர்கள் பயின்று வருகின்றனர்.






மாணவர்களிடையே அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தலைமை பண்பினை உருவாக்குவதற்காகவும் மாணவர் தேர்தல் நடைபெற்றது. சூன் மாதம் பள்ளி திறந்ததும் மாணவர்களிடையே தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டனர். நான்காம் வகுப்பு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் வேட்பாளர்களாக தகுதி பெற்றவர்கள். வேட்பாளர்களாக இந்தாண்டு பதினோரு மாணவர்கள் வேட் மனு தாக்கல் செய்தனர். தினந்தோறும் சகமாணவர்களிடையே வாக்கு சேகரிக்கும் பணியிலும் மாணவ வேட்பாளர்கள் ஈடுபட்டு வந்தனர். பள்ளிகளிலும் வீடுகளுக்கும் மாணவ வேட்பாளர்கள் நேரில் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
அதன்படி வேட்பாளர்களுக்கான வாக்குச்சீட்டு மற்றும் வாக்காளர்கள் இறுதிப்பட்டியலும் வெளியிடப்பட்டது. முறைப்படி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டது. தேர்தலை பார்வையிட பெற்றோர்களும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர். மாணவர்கள் வரிசையாக நின்று ஜனநாயக கடமையை ஆற்று விதமாகவும் தங்களுக்கு பிடித்த மாணவ வேட்பாளர்களுக்கு வாக்குச்சீட்டில் முத்திரை பதித்து வாக்களித்தனர். தலைமை தேர்தல் அலுவலராக பள்ளியின் ஆசிரியர் திருப்பதி (எழுத்தாளர் சோலச்சி )அவர்களும் தேர்தல் அலுவலர்களாக ஆசிரியர் நதியா, பள்ளி மேலாண்மை குழு தலைவர் ரேகா, சமூக ஆர்வலர் முருகேசன் , பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் சண்முகசுந்தரம், சமூக ஆர்வலர் புதுப்பட்டி கண்ணன் போன்றோர் நியமிக்கப்பட்டு தேர்தல் முறையாக நடைபெற்றது.
மாணவ வாக்காளர்களின் பெயர் பட்டியலை சரிபார்த்தல், மாணவர்களின் விரல்களில் மை வைத்தல், வாக்குச்சீட்டு வழங்குதல், மை வைத்து வாக்களிக்கும் முத்திரை வழங்குதல், மாணவர்களை ஒழுங்குபடுத்துதல் போன்ற பணிகளை தேர்தல் அலுவலர்கள் சிறப்பாக செய்தனர்.
வாக்களித்து முடிந்ததும் சிறிது நேரத்தில் வாக்கு பெட்டியில் இருந்து வாக்குகள் சேகரிக்கப்பட்டு உடனடியாக எண்ணப்பட்டது. தேர்தலில் வெற்றி பெற்ற மாணவர்ளுக்கு பதவி ஏற்பு விழாவும் நடத்தப்பட்டது. அறிவகம் அமைச்சராக ச.ஹரிணி, உள்துறை அமைச்சராக க.யுவராஜ்,
வெளியுறவுத்துறை அமைச்சராக ச.லோகேஸ்வரி, மதிய உணவு மற்றும் நீர் மேலாண்மை துறை அமைச்சராக ரெ.ரித்க் ரோகினி, கண்காணிப்பு மற்றும் புலனாய்வுத்துறை அமைச்சராக ப.சந்தோஷ், மரம் மற்றும் இயற்கை பாதுகாப்பு அமைச்சராக பொ.வித்யா, இணை அமைச்சர்களாக பா.சண்முஹாசினி, கோகுல்ராஜ், அருண், ச.பிரித்திகா போன்றோர் தேர்ந்தெடுக்கப்பட்டு முறையே பதவி ஏற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்வில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களும் பெற்றோர்களும் ஊர் பொதுமக்கள் என பலரும் ஆர்வமுடன் பார்வையாளர்களாக கலந்து கொண்டனர். காலை உணவு சமையலர் அகிலாம்பாள் மாணவர்களுக்கு எழுது பொருட்களை பரிசாக வழங்கினார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் புதுப்பட்டி கண்ணன் போன்றோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
மாணவர் தேர்தல் குறித்து ஆசிரியர் திருப்பதி (எழுத்தாளர் சோலச்சி) அவர்களிடம் கேட்டபோது “ஆசிரியர் பணியில் சேர்ந்ததில் இருந்து இருபத்தோராம் ஆண்டாக இந்த தேர்தலை நடத்தி வருகின்றேன். தம்மிடம் படிக்கும் மாணவர்கள் மாபெரும் ஆளுமை மிக்கவர்களாக வளர வேண்டும் என்பதுதான் எனது எண்ணம். இதன் மூலம் மாணவர்களிடைய அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. சுய கட்டுப்பாடு சுய சிந்தனை மேம்படுகிறது.
தலைமை பண்பினை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்பாக மாணவர் தேர்தலை நடத்தி வருகின்றேன். குப்பைகளை குப்பை தொட்டியில் போடுதல், தன் சுத்தம் பேணுதல், ஒரு பொருளை எடுத்தால் அதே இடத்தில் மீண்டும் வைப்பது, கீழே ஒரு பொருள் கிடந்தால் யாருடையது என விசாரித்து உரியவர்களிடம் ஒப்படைக்கும் பண்பும் வளர்கிறது. மேலும், மாணவரிடம் ஒற்றுமை உணர்வுடன் குழு மனப்பான்மையும் சமூக அக்கறையும் ஏற்படுகிறது. வரும் காலங்களில் அரசியல் புரிதலும் மக்கள் மீது மிகுந்த பேரன்பு கொள்வதற்கும் வாய்ப்பாக அமைவதாகவும் கூறினார்.”ஜூன் 27 அமரர் மல்லிகை ஜீவாவின் 98 ஆவது பிறந்த தினம்
![]()