பலதும் பத்தும்

சீனாவில் அதிகரித்துள்ள மணப்பெண் தட்டுப்பாடு!

வங்கதேச பெண்களைச் சீன இளைஞர்கள் திருமணம் செய்து கொள்ளும் முறையான “மணப்பெண் ஷாப்பிங்” தொடர்பில் சீன அரசாங்கம் அந்நாட்டு இளைஞர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் ஒன்றாக சீனா காணப்படுகின்றது. கடந்த சில காலமாக சில காரணங்களால் சீன இளைஞர்களுக்குத் திருமணம் செய்து கொள்வதில் பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

எவ்வாறெனில் சீனாவில் இதற்கு முன்பு பல ஆண்டுகள் , ஒரு குழந்தை கொள்கை இருந்தது. அதாவது ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பெறுவோருக்கு அரசு வேலை உட்பட பல சலுகைகள் மறுக்கப்படும். இதனால் அந்த காலகட்டத்தில் பலரும் ஆண் குழந்தைகளையே பெற விரும்பினர்.

இதனால் சீனாவில் பாலின ஏற்றத்தாழ்வு ஏற்பட்டது. இதன் காரணமாகவே சீனாவில் சுமார் 30 லட்சம் இளைஞர்கள் வாழ்க்கைத் துணை இல்லாமல் வெளிநாடுகளில் பெண்களைத் தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் இதனைப் பயன்படுத்தி சில வன்முறைக் கும்பல்கள் வங்கதேசத்தில் பெண்களைக் கடத்தி சீன இளைஞர்களுக்குத் திருமணம் என்ற பெயரில் விற்பனை செய்கின்றார்கள்.

இது தொடர்பாக வங்கதேசத்தில் உள்ள சீன தூதரகம் முக்கியமான அறிவுறுத்தலை வெளியிட்டு சீன இளைஞர்களை எச்சரித்துள்ளது. அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

சீனாவில் இப்போது மணப்பெண்களுக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் வங்கதேசத்தைச் சேர்ந்த பெண்களைத் திருமணம் செய்து, அவர்களைச் சட்டவிரோதமாகச் சீனாவில் அழைத்து வந்துவிடுகிறார்கள். இதை வைத்து அங்கு மிகப் பெரிய மோசடிகளும் நடக்க ஆரம்பித்துவிட்டது.

சீன இளைஞர்களிடம் அழகான பெண்களின் படங்களைக் காட்டி, அவர்களைத் திருமணம் செய்து வைக்கிறோம் என்று பணத்தைப் பெறும் கும்பல் மோசடி செய்து வருகின்றது. இதன் காரணமாகவே சட்டவிரோத திருமண ஏற்பாடுகளைத் தவிர்க்குமாறும் ஆன்லைன் திருமணத் திட்டங்களில் எச்சரிக்கையாக இருக்குமாறும் சீனா வலியுறுத்துகிறது.

எல்லை தாண்டிய டேட்டிங் என்று விளம்பரப்படுத்தி சிலர் வலைவிரிப்பதாகவும் அதில் ஏமாற வேண்டாம் என்றும் கூறியுள்ளது.

இதேவேளை- இந்த போலி திருமணங்கள், பல பெண்களை மனிதக் கடத்தலுக்கு உள்ளாக்குகின்றன. வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானில் இருந்து பெண்கள், சீனாவில் நல்ல வாழ்க்கை என்று நம்பி, திருமணத்தின் பெயரில் கடத்தப்படுகின்றனர்.

அவர்கள் அங்கு அடிமைத்தன வாழ்க்கை, பாலியல் வன்முறை போன்ற துன்பங்களை அனுபவிக்கின்றனர் என்றும் சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button