இலங்கை

ஜேவிபி வெற்றிபெற்றால், காற்றையும் மண்ணையும் காப்பாற்ற முடியாது! கவலையில் செல்வம்

உள்ளூராட்சி மன்றங்கள் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கணிய மணல் அகழ்வுக்கான அனுமதியை வழங்கக் கூடிய அதிகாரம் கொண்டவை. எனவே உள்ளூராட்சி மன்றங்களை ஜே.வி.பி.அரசு முழுமையாக கைப்பற்றுமாக இருந்தால் மன்னார் மாவட்டத்தை காப்பாற்ற முடியாத ஒரு சூழலை ஏற்படுத்தும்.

மன்னாரில் நகர சபை மற்றும் பிரதேச சபைகளை அவர்கள் கைப்பற்றுவதன் ஊடாக தமது காரியங்களை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்ற நோக்கத்துடன் அவர்களின் மன்னார் விஜயம் மற்றும் தேர்தல் பிரச்சாரங்கள் அமைந்துள்ளது என தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ கட்சியின் தலைவரும்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான காலம் நெருங்கிக் கொண்டு இருக்கின்ற நிலையில் வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து உள்ளூராட்சி சபைகளிலும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு போட்டியிடுகின்றது.சில சபைகளின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் நீதிமன்றத்தை நாடி தற்போது வெற்றி பெற்றுள்ளோம்.

இந்த நிலையில் ஜனநாயக தமிழ் தேசியக்கூட்டமைப்பு பல சபைகளை கைப்பற்றும் நிலை ஏற்படும்.எனினும் நாங்கள் நிர்ணயம் செய்யும் சக்தியாக இத்தேர்தலில் காணப்படுவோம்.

யாருடன் இணைந்து செயலாற்ற வேண்டும் என்ற நிலை உள்ளது.குறிப்பாக தேசியத்தை நேசிக்கும் தமிழ் கட்சிகளுடன் நாங்கள் கூட்டுச் சேர்ந்து ஆட்சி அமைக்கும் சூழலை உருவாக்குவோம்.

இனி வருகின்ற காலங்களில் நாங்கள் ஒற்றுமையாக இல்லாது விட்டால் எமது பிரதேசங்களில் பிளவுகளையும் அழிவுகளையும் ஏற்படுத்தும்.தேசியத்தை இல்லாது செய்யும் நடவடிக்கையையும் ஏற்படுத்தும்.

எனவே உள்ளூராட்சி மன்ற தேர்தலின் போது நாங்கள் நிர்ணயம் செய்கின்ற சக்தியாக தேசியத்தை நேசிக்கின்ற கட்சிகளுடன் இணைந்து ஆட்சி இமைக்கின்ற வாய்ப்புகளை உருவாக்குவோம்.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் அடிக்கடி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்கின்றனர்.ஆனால் பாதிக்கப்பட்ட வன்னி பிரதேசங்களுக்கும் உங்களின் விஜயம் இடம் பெற வேண்டும் என அண்மையில் பாராளுமன்றத்தில் கோரிக்கையை முன் வைத்து உரை நிகழ்த்தினேன்.

ஆனால் ஜனாதிபதி ,பிரதமர் மற்றும் அமைச்சர்கள் தேர்தல் காலங்களில் மாத்திரமே வன்னி பிரதேசங்களுக்கு வருகின்றனர்.குறிப்பாக மன்னார் மாவட்டத்திற்கு வருகின்றனர்.தேர்தலில் தமது கட்சி வெற்றி யை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற அர்த்தத்துடன் வருகிறார்கள்.

குறிப்பாக மன்னாரில் கனிய மணல் அகழ்வு மற்றும் காற்றாலை மின் உற்பத்தி பிரதான விடையமாக பார்க்கப்படுகின்றது. மன்னார் மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் குறித்த நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் குறித்த செயல்பாடுகளை நிறுத்த கோரிக்கை விடப்பட்டது. ஆனால் தற்போது மன்னாரிற்கு பிரதமர் மற்றும் ஜனாதிபதியின் வருகை என்பது இந்த நாட்டின் பொருளாதாரத்தை மேம் படுத்துவதற்கும், குறித்த இரு திட்டங்களையும் மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதற்கான சந்தர்ப்பமாக அமையும்.

உள்ளூராட்சி மன்றங்கள் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கணிய மணல் அகழ்வுக்கான அனுமதியை வழங்கக் கூடிய அதிகாரம் கொண்டவை.

எனவே உள்ளூராட்சி மன்றங்களை ஜே.வி.பி.அரசு முழுமையாக கைப்பற்றுமாக இருந்தால் மன்னார் மாவட்டத்தை காப்பாற்ற முடியாத ஒரு சூழலை ஏற்படுத்தும்.

மன்னாரில் நகர சபை மற்றும் பிரதேச சபைகளை அவர்கள் கைப்பற்றுவதன் ஊடாக தமது காரியங்களை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்ற நோக்கத்துடன் அவர்களின் மன்னார் விஜயம் மற்றும் தேர்தல் பிரச்சாரங்கள் அமைந்துள்ளது.

கடந்த 6 மாதங்களுக்குள் மன்னாரிற்கு ஜனாதிபதியின் வருகை இடம் பெறவில்லை.எனினும் ஒரு சிறிய தேர்தலுக்காக அவர் மன்னாருக்கு வருகிறார்.மீன்பிடி மற்றும் சுகாதார அமைச்சர்கள் மன்னாருக்கு வருவதாக கூறினார்கள். இது வரை அவர்களின் வருகை இடம் பெறவில்லை.

ஆனால் தற்போது அவர்கள் எல்லோரும் மன்னாரிற்கு வருகை தருவது எமது மண்ணையும்,காற்றையும் வருமானமாக்குவதாகவே நோக்கமாக உள்ளது. எனவே மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.என தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button