இலங்கை

வவுனியாவில் 1500 சிங்கள குடும்பங்களை குடியமர்த்த முயற்சி – செல்வம் எம்.பி மீது குற்றம் சுமத்தும் கஜேந்திரன்

வவுனியாவில் கீழ் மல்வத்து ஓயா திட்டத்தில் 1500 சிங்கள குடும்பங்களை குடியமர்த்த முயல்கிறார்கள். இதை சுட்டிக் காட்ட முதுகெலும்பற்ற அடைக்கலநாதன் தான் வரவு செலவுத் திட்டத்தில் நன்மை இருப்பதாக கூறி அதை ஆதரித்துள்ளார்.

சர்வதேச சமூகத்தின் முன்னால் அவர் அரசை பாதுகாக்கின்றார் என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் பொதுச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 2009 ஆம் ஆண்டு கொடூரமான முறையில் எமது விடுதலைப் போராட்டத்தை அரசாங்கம் அடக்கிய போது எதிர்வரும் 50 வருடங்களுக்கு தமிழ் மக்கள் தமது இருப்பை பற்றி சிந்திக்க கூடாது என்று கருதியே கொடூரமாக செயற்பட்டது.

பலர் கைது செய்யப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டார்கள். ஆனல் இன்று வேட்பாளர்களை பார்க்கின்ற போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. எமது தமிழ் தேசிய இனத்தின் உரிமைக்கான குரல் வலுவாக இருக்கின்றது.

ஒற்றையாட்சிக்குள் தமிழ் மக்களுக்கு தீர்வு இல்லை என்பது தெட்டத்தெளிவானது. நாங்கள் தோற்றுப் போனாலும் ஒரு கொள்கையோடு நின்று தோற்றுப் போனார்கள் என்ற வரலாறு பதியட்டும் என்று தான் கடந்த காலங்களில் இருந்து செயற்பட்டு வருகின்றோம்.

தமிழ் தேசிய பேரவை உதயமாகியதை நினைத்து மகிழ்சியடைகின்றோம். மரணித்த மாவீரர்களின் தியாகங்களுக்கு வலிமை இருக்கின்றது என்று உணர்கின்றேன். அடிமையாக வாழக் கூடாது என்பதற்காக நாம் எப்படி செயற்பட வேண்டும் என்று தான் பாடங்களை படிக்க வேண்டும். நாங்கள் பொறுப்பற்ற முடிவுகளை எடுத்திருக்கவில்லை. மக்களுடைய இருப்பு சார்ந்தே ஒவ்வொரு முடிவுகளையும் எடுத்துள்ளோம்.

அழிவின் விளிம்பில் இருக்கின்ற இந்த மாவட்டத்தை பாதுகாப்பதற்காக யுத்தம் முடிந்து 15 வருடங்களுக்கு பின்பும் இளைஞர்கள் உயிர் கொடுக்கும் வகையில் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

வெடுக்குநாறி மலையில் புத்த விகாரையை நிறுவி அதனை பௌத்தமயமாக்க முயன்ற போது மக்கள் திரண்டு அதற்கு எதிராக போராடியிருக்கிறார்கள்.

நீதிமன்றங்களில் வழக்குகள் நடைபெற்றாலும் மக்கள் போராட்டங்களே அந்த ஆக்கிரமிப்பை தடுத்துள்ளது. இந்த இளைஞர்களை கட்டுப்படுத்த தொல்பொருட் திணைக்களமும், பொலிசாரும் இணைந்து செயற்பட்டனர். வவுனியா சிறைச்சாலைக்குள் மிருகங்கள் கூட வாழ முடியாது. அவ்வாறாக சிறைச்சாலைக்குள் எமது இளைஞர்கள் அடைக்கப்பட்டார்கள். இதன் மூலம் அவர்களை முடக்க நடவடிக்கை எடுத்தார்கள். அந்த சந்தர்ப்பத்தில் தமிழினமாக ஒற்றுபட்டு போராடி அவர்களுக்கு விடுதலை கிடைத்தது.

அவர்கள் போராடி இருக்கவில்லை என்றால் குருந்தூர் மலை போன்று வெடுக்குநாறியில் புத்தர் கோவில் இருந்திருக்கும். 2009 ஆம் ஆண்டுக்கு பின் தமிழ் மக்களின் தலைமைச் சக்தி என்று தாம்பாளத்தில் வைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கொடுக்கப்பட்டது.

2009 வரை விடுதலைப் புலிகள் ஆக்கிரமிப்பை தடுத்தார்கள். 2009 இற்கு பின் 2013 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ஸ அரசால் கொக்கசான்குளம் பகுதியில் சிங்கள குடியேற்றம் உருவாக்கப்பட்டு 2015 இல் நல்லாட்சிக் காலத்தில் வவுனியா சைவப்பிரகாச கல்லூரியில் வைத்து உறுதிகள் வழங்கப்பட்டது. அதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சுமந்திரனும், செல்வம் அடைக்கலநாதனும், மைத்திரிபால சிறிசேனவுடன் சேர்ந்து சிங்கள குடும்பங்களுக்கு உறுதிகளை வழங்கி வைத்தார்கள்.

இன்று வவுனியா வடக்கு பிரதேச சபையில் 5 சிங்கள பிரதிநிதிகள் வருவதற்கான வாய்ப்புக்களை உருவாக்கியுள்ளது. சிங்கள போகினவாதம் மட்டும் எங்களது அழிவுக்கு காரணமாக இருக்கவில்லை. காலம் காலமாக சிங்கள பேரினவாதிகள் எங்களது தரப்பில் இருந்து விலைபோகக் கூடிய சலுகைகளுக்கு அடிபணியக் கூடியவர்களை பக்கத்தில் வைத்துக் கொண்டு தான் அனைத்து காரியங்களையும் ஒப்பேற்றியுள்ளார்கள். இந்த நிலமை தடுக்கப்பட வேண்டுமாக இருந்தால் எங்களது அணி வெற்றி பெற வேண்டும்.

மக்கள் சக்திக்கு ஒரு வலிமை இருக்கிறது. அது உறுதியாக இருந்தால் வெற்றி பெறும். ஆகவே, உறுதியாக நிற்கக் கூடிய ஒரு தரப்பை பலப்படுதத வேண்டியது மக்களது கடமை. அந்த கடமையை மககள் சரியாக செயதால் ஒவ்வொருவரும் சபைகளில வெற்றி பெற்று, மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் என்ற அடிப்படையில் உங்கள் கருத்துக்களுக்கு பெறுமதி இருக்கும். கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு பின்னால் நீங்கள் எலலோரும் இருக்கின்றீர்கள் என்றால் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினுடைய கருத்துக்கு வலிமை இருக்கும். அதனை சர்வதேச சமூகம் தட்டிக் கழிக்க முடியது.

ஆகவே, நீங்கள் ஆற்ற வேண்டிய கடமை என்பது மக்களிடம் சென்று நியாயங்களை சொல்லுங்கள். தமிழ் தேசியத்தின் பால் உறுதி கொண்டவர்கள் எம்முடன் கை கோர்த்துள்ளார்கள். ஜனநாயக தமிழரசுக் கட்சி, தமிழ் தேசிய கட்சி, அருந்தவபாலன் ஐயா, ஐங்கரநேசன் ஐயா என எம்முடன் இணைந்துள்ளார்கள். சிறிகாந்தா ஐயா ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியில் இருந்தார்கள். செல்வம் அடைக்கலநாதன் வரவு செலவுத் திட்டத்தை எதிர்க்க வேண்டும் என்றார்கள். ஆனாலும், அவர் வரவு செலவுத் திட்டத்தை ஆதரித்தமையை எதிர்த்தார்கள். அது பிழையானது எனக் கூட்டிக் காட்டிய சிறிகாந்தா ஐயா, சிவாஜிலிங்கம் ஐயா அவர்கள் அதில் இருந்து வெளியேறினார்கள். இன்று கொள்கைக்காக எம்மோடு இணைந்துள்ளார்கள்.

கீழ் மல்லவத்து ஓயா திட்டத்தில் வவுனியா மாவட்டத்தில் 1500 சிங்கள குடியேற்றங்களை குடியேற்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது. தந்திரிமலை பகுதியில் நீர்த்தேககம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு 1500 குடும்பங்களுக்கு காணிகள் வழங்க ஏற்பாடுகள் நடைபெறுகிறது.

இத் திட்டத்தால் உண்மையில் அங்கு 15 முஸ்லிம் குடும்பங்கள் நிலங்களை இழந்தன. ஆனால் நீர்திட்டம் எனற பெயரில் சர்வ தேச நிதியில் எமது பிரதேசததில் சிங்கள குடியேற்றத்தை கொணடு வர முயல்கிறார்கள். இதை சுட்டிக் காட்ட முதுகெலும்பற்ற அடைக்கலநாதன் தான் வரவு செலவுத் திட்டத்தில் நன்மை இருப்பதாக கூறி அதை ஆதரித்துள்ளார். ஏன் என்று சொன்னால் சர்வதேச சமூகத்தின் முன்னால் அவர் அரசை பாதுகாக்கின்றார்.

அனுரகுமார திஸாநாயக்கா இனவாதத்தின் மொத்த வடிவம். முதல் இருந்த அரசாங்கங்கள் நேரடியாக யுத்த குற்றங்களில் சம்மந்தப்பட்டுள்ளார்கள். ஆனால் அனுர அந்த அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்து, இராணுவத்திற்கு ஆட்களை திரட்டிக் கொடுத்தார்கள்.

இவர்கள் புதியவர்கள் என்ற மாயைத் தோற்றம் கட்டியெழுப்பபடுகிறது. அதை வைத்து தமிழ் மக்களது ஆதரவை பெற்று தமிழ் இனப்படுகொலையை மறைத்து இங்கு அபிவிருத்தி தான் பிரச்சனை என எமது மக்களை வைத்து சொல்ல வைக்கும் செயற்பாடு நடைபெறுகிறது. எமது விரலை வைத்து கண்ணை குத்தும் செயற்பாடு நடக்கிறது.

ஆகவே, எம்மை நாம் ஆளும் நிலை உருவாக வேண்டும். பேரினவாத கட்சிகள் விரட்டியடிக்கப்பட வேண்டும். அவர்களது முகவர்கள் விரட்டியடிக்கப்பட வேண்டும். கொள்கை மாறாத ஒரு தலைமைத்துவத்தை பலப்படுத்த, எமது சமத்துவமான நிர்வாகத்தை ஏறபடுத்த ஒரு சந்தர்ப்பத்தை கொடுங்கள். உள்ளுர் அதிகாரத்தை கைப்பற்றி தேசிய ரீதியல் இனப் பிச்சனைக்கு தீர்வு காண ஆணை தாருங்கள் எனத் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button