முச்சந்தி

சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8 : பெண் விடுதலைக்காக போராடிய பாலஸ்தீன – ஈழப் பெண் கவிஞர்கள்!….  ஐங்கரன் விக்கினேஸ்வரா

(அரசியல், சமூக, பொருளாதார உரிமைகள் பெறவேண்டி போராடிய பெண்களின் தினமே மார்ச் 8. அடுப்போடு வாழ்ந்த பெண்கள் நெருப்பாய் எழுந்த நாளாகும்)
அனைத்துலக பெண்கள் தினமான மார்ச் 8 வெறுமனே பெண்களை புகழ்ந்து களிகொள்ளும் நாள் மட்டுமல்ல. சர்வதேச பெண்கள் தினமான மார்ச் 8 உழைக்கும் பெண்கள் தமது அடிப்படை உரிமைக்காக போராடி இரத்தம் சிந்திய நாளாகும்.
பெண்விடுதலைக்காக தமிழ் பெண் கவிஞர்களின் படைப்புக்கள் நீண்ட காலமாக ஓங்கி ஒலித்தது. அதற்கு ஒப்பாக பாலஸ்தீன பெண் கவிஞர்களின் கவிதைகள் விடுதலைக்கு உயிர்ப்பூட்டும் வரிகளாக இருப்பதை காணலாம்.
கவிதை பேராயுதமாக போராயுதமாக:
ஈழத்து போர்க்கால இலக்கியப் பரப்பில் பாலஸ்தீனக் கவிதைகள் பெரும் தாக்கத்தினை உருவாக்கியுள்ளன. ஏனெனில் இரு போராடும் மக்களும் அரசின் ஆக்கிரமிப்புக்கு, அடக்குமுறைக்கு எதிராக கிளர்ந்தெழுந்தவர்கள். துப்பாக்கிகளைக் காட்டிலும் கவிதை ஆட்சியாளர்களை, அடக்குமுறையாளர்களை கலங்கடிக்கும் பெரும் போராயுதமாக ஓர் காலத்தில் விளங்கியது.
இஸ்ரேல் ஆக்கிரமிப்பில் பல பாலஸ்தீன பெண் கவிஞர்களை சிறையில் அடைத்து வைத்து, அவர்களின் கவிதைகளை தடை செய்தனர். ஆண் கவிகளுக்கு இணையாக பெண் கவிகளும் போரியல் கவிதைகளை சிறப்பாக யாத்தனர். அவர்களின் கவிதைகள் தமிழிலும் மொழி பெயர்க்கப்பட்டன.
பாலஸ்தீன பெண் கவிஞர்கள்:
எத்தனை காலம் சென்றாலும் இக் கவிஞைகளின் படைப்புகள் உயிர் வாழும். ஏன் எனில் அக்கவிதைகளின் மூச்சொலி இன்னமும் அடங்கவில்லை. என்றும் உயிர்ப்பாய் விடுதலை நோக்கி முகாரி பாடிக் கொண்டே இருக்கும்.
வரலாற்று ரீதியில் பாலஸ்தீனத்துக்கு என்று செறிவான இலக்கிய மரபு உண்டு. மிக நுட்பமான இலக்கண வரம்புக்கு உட்படுத்தப்பட்ட கவிதை வடிவங்கள், நாடகங்கள், நாவல்கள் பாலஸ்தீனத்தில் படைக்கப்பட்டுள்ளன. ஆனால் 1948ஆம் ஆண்டு இஸ்ரேல் தோற்றம் பெற்றபோது பாலஸ்தீன இலக்கிய வாழ்வு திடீரென்று மூச்சை இழந்தது.
ஆயினும் துண்டிக்கப்பட்ட உயிர் மூச்சு மீள சுவாசித்தது. போரின் தோல்வி, தோழர்களின் இழப்பு, சிறைக்காவல், சித்ரவதைக்கூடம், சிறுவர்கள் மீதான தாக்குதல், ஐக்கிய நாடுகள் சபையின் பாராமுகம், தாயகம் மீதான ஏக்கம் என கவிதையின் பாடுபொருள்கள் பாலஸ்தீனத்தில் மீள உயிர் பெற்றன.
பாலஸ்தீன எழுத்தாளர்கள் பலரின் எழுத்துலகின் மையத்தில் பாலஸ்தீனப் பேரழிவு தெளிவாக வெளிப்பட்டு உள்ளது. ஏதிலிகளாக்கப்பட்ட, குடிபெயர்ந்த, ஊனமாக்கப்பட்ட மக்களின் வாழ்வில் விழும் துயரப் பெருநிழலை பல்வகைப்பட்ட இலக்கிய வடிவங்களையும் புனைவு வகைமைகளையும் கையாண்டு உலகின்முன் சித்தரிக்க இவர்கள் முயற்சி செய்துள்ளனர்.
ஈழப்பெண் கவிஞர்களின் வீரவரலாறு
புறநானூற்றை விஞ்சிய வீரம் படைத்த ஈழப்பெண் கவிஞர்களின் படைப்புக்கள் வரலாற்றின் பக்கங்களில் முழுமையாக பதியப்படாவிடினும் களமாடி, தியாகித்த மங்கையரை தமிழ் கூறும்
உலகம் ஒருபோதும் மறவாது. போர்க்கள இலக்கியத்தின் பெருமைக்கு சான்றாக அவர்களின் படைப்புகளே இலக்கிய சாட்சியங்களாக பகர்கின்றன.
அடுப்போடு வாழ்ந்த பெண்கள் நெருப்பாய் எழுந்த – சர்வதேச பெண்கள் தினமான மார்ச் 8 உழைக்கும் பெண்கள் தமது அடிப்படை உரிமைக்காக போராடி இரத்தம் சிந்திய நாளாகும்.
அரசியல், சமூக, பொருளாதார உரிமைகள் பெறவேண்டி போராடிய பெண்களின் தினமே மார்ச் 8.
அநீதி என்றால், அறம் தவறினால் அடங்காதே, அதனை எதிர்த்து போராடு என்பதை போதிப்பது தான் தமிழ் இலக்கியங்களின் அடிப்படை கோட்பாடாக அமைகிறது.
தமிழ் மொழி எப்போதுமே பெண்களை உயர்த்தியே கொண்டாடுவதை காப்பியங்களிலும், காவியங்களிலும் காணலாம்.
 
தமிழ் இலக்கியத்தில் பெண்கள்:
உலகம் முழுவதுமே பெண்களை அடிமைப் படுத்தி வைத்திருந்த கால கட்டத்தில் பெண்களை மேன்மை மிகு பொக்கிஷமாக போற்றிப் புகழ்ந்தது தமிழ் காப்பியங்கள். ஆண்டாண்டு காலமாக பெண்களை போற்றிப் புகழ்ந்து கொண்டாடியது நம் தமிழ் இலக்கியங்களே ஆகும்.
உலக மொழிகளின் தாய் என்று கூறிக் கொள்ளும் கிரேக்கத்தில் கூட 7 பெண்கள் தான் அக்காலத்தில் இருந்தனர். ஆனால் சங்க காலத்திலேயே, 47 பெண் எழுத்தாளர்களைக் கொண்டது உலகிலேயே தமிழ் சமூகம் மட்டும்தான்.
சங்க தமிழ் இலக்கியங்களில் புலியை, யானையை விரட்டிய பெண்களின் வீரமும் போருக்குத் தன் கணவன்,  மகன் என ஒருவர் பின் ஒருவராக அனுப்பி வைத்த பெண்களின் வீரமும் விதந்து போற்றப்பட்டுள்ளன. பெண்கள் போர்க்களத்தில் போரில் ஈடுபடுத்தப்பட்டமை பற்றிய குறிப்புக்கள் இல்லை. யுத்தம் நிறைவுற்ற பின் போரில் புண்பட்ட வீரர்களை, கணவனை காவல் செய்யும் செய்த வரலாறும் உண்டு.
புற நானூற்றை மிஞ்சிய வடிவமாய் மனோதைரியத்தையும் விடுதலை வேட்கையையும் கைவிடாத வீர உணர்வும் தைரியமும் மிக்கவர்களாக தம்மை இனங்காட்டுவதோடு, தமது சுயத்தையும் நம்பிக்கையையும் இழக்காதவர்களாக ஈழப் பெண் போராளிக் கவிஞைகள் மிளிர்ந்துள்ளனர்.
இப் பெண் போராளிகளின் படைப்பைகளில தாம் எவருக்கும் அடங்கி, அடிமைப்பட்டுப் போகாத, இலக்கை அடைவதையே நோக்காகக் கொண்ட, தமது சுயத்தை இழக்காத தன்மையை அவதானிக்க முடிகின்றது.
உலகம் முழுவதுமே பெண்களைக் ஒடுக்கி வைத்திருந்த கால கட்டத்தில் பெண்களை மேன்மை மிகு பொக்கிஷமாக போற்றிப் புகழ்ந்தது தமிழ் சமூகம்.
பிற்கால ஈழப்போராட்ட களத்தில் பெண் போராளிக் கவிஞைகளாக பலராலும் அதிகம் அறியப்பட்ட,  அடையாளப் படுத்தப்பட்ட கவிஞைகளான அம்புலி, ஆதிலட்சுமி, கஸ்தூரி, வானதி, பாரதி, அலையிசை, மலைமகள், தூயவள், நாமகள், சூரியநிலா, சுதாமதி, தமிழவள் , காந்தா, ஜெயா, கலைமகள், கனிமொழி, ஞனமதி, புரட்சிகா, நகுலா, நாதினி, பிரேமினி, பிரமிளா, ரூபிமார்க்கட், தயாமதி, சிரஞ்சீவி, கிருபா போன்றோரின் கவிதைகளும் தமிழ் மண்ணின் வீரத்தை பரணிக்கு பறை சாற்றுகின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button