உலகம்

உக்ரேன் ஜனாதிபதி சர்வாதிகாரி என சாடிய ட்ரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புதன்கிழமை (19) உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை ஒரு “சர்வாதிகாரி” என்று கண்டனம் செய்தார்.

மேலும் அவர் அமைதியைப் பாதுகாக்க விரைவாக செயற்பட வேண்டும் என்றும், அவ்வாறு இல்லாவிடின் ஜெலென்ஸ்கி தனது நாட்டை இழக்கும் அபாயத்தை எதிர்கொள்ளக் கூடும் என்றும் எச்சரித்தார்.

ட்ரம்பின் இந்த கருத்தானது இரு தலைவர்களுக்கிடையிலான பகையை ஆழப்படுத்தியதுடன் ஐரோப்பிய அதிகாரிகளையும் எச்சரித்தது.

ரஷ்யாவின் 2022 படையெடுப்பிற்கு உக்ரேன் தான் காரணம் என்று ட்ரம்ப் கூறிய ஒரு நாளுக்குப் பின்னர் – ரஷ்யா-உக்ரேன் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ட்ரம்பின் அணுகுமுறை மொஸ்கோவிற்கு பயனளிக்கும் என்று ஐரோப்பாவில் உள்ள அமெரிக்க நட்பு நாடுகளிடையே கவலைகளை அதிகரித்தது.

அவர் ஜனாதிபதியாக ஒரு மாதத்திற்குள், போரில் ரஷ்யாவை தனிமைப்படுத்தும் பிரச்சாரத்தை புட்டினுடனான தொலைபேசி அழைப்பு, சவுதி அரேபியாவில் உக்ரேனை ஓரங்கட்டிய மூத்த அமெரிக்க மற்றும் ரஷ்ய அதிகாரிகளுக்கு இடையேயான பேச்சுக்கள் மூலம் முடிவுக்கு கொண்டுவந்தார்.

இந்த நிலையில், புதன்கிழமை சமூக ஊடகங்களில் பதிவிட்ட ட்ரம்ப் ஜெலென்ஸ்கியை தேர்தல்கள் இல்லாத ஒரு சர்வாதிகாரி என்றும் சாடினார்.

இதற்குப் பதிலளித்த உக்ரேன் வெளிவிவகார அமைச்சர் Andrii Sybiha, தனது நாட்டை விட்டுக்கொடுக்க யாரும் கட்டாயப்படுத்த முடியாது என்றார்.

ஜெலென்ஸ்கியின் ஐந்தாண்டு பதவிக்காலம் 2024 இல் முடிவடைய வேண்டும், ஆனால் ரஷ்யாவின் படையெடுப்பிற்கு பதிலளிக்கும் வகையில் உக்ரேன் 2022 பெப்ரவரியில் விதித்த இராணுவச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதி, நாடாளுமன்றத் தேர்தல்களை நடத்த முடியாது.

சவுதி அரேபியாவில் நடந்த அமெரிக்க-ரஷ்யா பேச்சுவார்த்தையில் கெய்வ் விலக்கப்பட்டதற்கு பதிலளித்த ஜெலென்ஸ்கி செவ்வாயன்று, அமெரிக்க ஜனாதிபதி மொஸ்கோவால் நிர்வகிக்கப்படுவதாக சாடிப் பேசினார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாகவே ட்ரம்பின் இந்தக் கருத்துக்கள் வந்துள்ளன.

இதனிடையே, அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் புதன்கிழமை ட்ரம்பை தாக்குவதற்கு எதிராக ஜெலென்ஸ்கிக்கு எச்சரிக்கை விடுத்தார்.

கடந்த ஜனவரி 20 ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் பதவியேற்ற ட்ரம்ப், உக்ரேன் போரை விரைவில் முடிவுக்கு கொண்டுவருவதாக பலமுறை சபதம் செய்தார்.

அவர் புட்ன் மற்றும் ஜெலென்ஸ்கிக்கு புதன்கிழமை தனித்தனியாக தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு உரையாடினார்.

இதனிடையே தற்சமயம் ரஷ்யா உக்ரேனின் ஐந்தில் ஒரு பகுதியைக் கட்டுப்படுத்துகிறது, மேலும் பல மாதங்களாக கிழக்கில் மெதுவாக முன்னேறி வருகிறது.

அதே நேரத்தில் உக்ரேனின் சிறிய இராணுவம் மனிதவள பற்றாக்குறையுடன் போராடுகிறது, மேலும் மேற்கு ரஷ்யாவில் ஒரு பகுதியை வைத்திருக்க முயற்சிக்கிறது.

இந்த நிலையில், எந்தவொரு சமாதான ஒப்பந்தத்தின் கீழும் உக்ரேனின் பிரதேசத்தை விட்டுக்கொடுக்கவும் நிரந்தரமாக நடுநிலை வகிக்கவும் ரஷ்யா கோரியுள்ளது.

கைப்பற்றப்பட்ட நிலத்தில் இருந்து ரஷ்யா வெளியேற வேண்டும் என்று உக்ரேன் கோருகிறது, மேலும் மாஸ்கோவின் தாக்குதலைத் தடுக்க நேட்டோ உறுப்பினர் அல்லது அதற்கு சமமான பாதுகாப்பு உத்தரவாதத்தை விரும்புகிறது.

போர் தொடங்கியதில் இருந்து அமெரிக்காவும் ஐரோப்பாவும் உக்ரேனுக்கு பல பில்லியன் டொலர்களை இராணுவ உதவியாக வழங்கியுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button