முச்சந்தி

தமிழர் தாயகத்தில் கரிநாளாகிய சிறிலங்காவின் சுதந்திர தினம்!…  நவீனன்

மீண்டும் ஒருமுறை தமிழ் மக்கள் தங்கள் தேசிய சுய அடையாளத்தை தெளிவாக வெளிக்காட்டி உள்ளனர். நிகழ் கால அனுர அரசோடு தமிழ் மக்கள் இல்லை என்பதையும், சிறிலங்காவின் சுதந்திர தினம் ஈழத்தமிழ் மக்களுக்கு எதனை உணர்த்துகிறது என்பதையும் உலகறிய வெளிக்காட்டி உள்ளனர்.
வட கிழக்கு தமிழர் தேசம் :
வடக்குக் கிழக்கு தனியான தேசம் தான் என்பதை அனுரவின் அரசிற்கு அடித்துக் கூறிய சுதந்திரதின நிகழ்வுகளை தாயக மக்கள் அறைகூவி உள்ளனர்.
இவ்வருடமும் சிங்கள அரசின் சுதந்திர நாளான 04.02.2025 அன்று தமிழர் தாயகத்தில் கரிநாள் என பிரகடனப்படுத்தி வடக்கு – கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழினப் படுகொலைக்கு நீதி கோரியும், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கோரியும், அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் எனக் கோரியும் கிளிநொச்சியில் மாபெரும் கறுப்புக்கொடிப் போராட்டம் நடைபெற்றது.
இதனைப் போல சிங்கள சுதந்திர நாளை கரிநாள் என அறிவித்து தமிழர் தாயகம் முழுவதும் பொதுமக்கள் திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக மட்டக்களப்பிலும், திருகோணமலையிலும் நடைபெற்ற போராட்டத்தில் தாயக மக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் பல நூறு மாணவர்கள் கலந்துகொண்டு, கறுப்புக் கொடியை பல்கலைக்கழக வளாகத்தில் ஏற்றி வைத்தனர்.
சிறிலங்கா சுதந்திரம் பெற்று 77 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில்
சிறுபான்மையான தமிழ் மக்கள் இன்றும் தங்கள் சுதந்திரத்திற்காகப் பல வழிகளில் போராடி வருகின்றனர்.
பல வருடங்களாக தமிழீழ மக்கள் தொடர்ந்தும் சிறிலங்கா சுதந்திர தினத்தை தமிழர்களின் கரிநாள் என பிரகடனப்படுத்தி தமிழர் தாயகம் புலம்பெயர் நாடுகளிலும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
சிறிலங்காவின் கறைபடிந்த வரலாறு:
சிறிலங்காவின் வரலாற்றில் கறைபடிந்த வடுக்களைப் பதிவாக்கிக் கொண்ட இனக் கலவரங்களையும், இனப்படுகொலைகளையும் சிங்கள ஆட்சியாளர்கள் உருவாக்கி உள்ளனர்.
சிறிலங்காவின் சுதந்திர தினம் என்பது சிங்களவர்களிற்கானது என்று ஆக்கப்பட்ட போது நாட்டின் சுதந்திர தினம் சிறுபான்மைத் தமிழ் மக்களிற்கு வேதனைக்குரிய நாளாகிப் போனது. சுதந்திர தினத்தைப் புறக்கணிப்பதே ஒரேவழி என்று தமிழ் மக்கள் நீண்ட காலமாகவே முடிவு செய்து கடைப்பிடிக்கின்றனர்.
தமிழர்க்கான சுதந்திரத்தை தர மறுத்துவிட்டு சுதந்திர தினத்தைக் கொண்டாடுங்கள் என்றால் அது எந்த வகையில் நியாயமாக இருக்க முடியும்? பிரித்தானிய காலணியாதிக்கத்தில்
இருந்து விடுவிக்கப்பட்ட பெப்ரவரி நான்காம் தினமே முன்னைய இலங்கையின் (Ceylon )
சுதந்திர தினமாக அனுஷ்டிக்கப்பட்டது யாவறும் அறிந்ததே.
இரண்டாம் தர பிரஜைகளாக தமிழர் :
ஆயினும் இன்றைய சிறிலங்காவில் (Sri Lanka) சிங்களவர்களுக்கு சுதந்திரம் கிடைத்த 77 வருடங்கள் ஆகினாலும், சிறுபான்மையின தமிழர் இரண்டாம் தர பிரஜைகளாக அல்லது ஏதிலிகளாக வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்பதே வரலாற்று உண்மையாகும்.
இந்தியாவின் சுதந்திரத்திற்கான தேசிய எழுச்சி பிரித்தானிய காலணியாதிக்கவாதிகளுக்கு எதிராக அகிம்சை வழியிலும், ஆயுதப் போராட்ட வடிவத்திலும் பரந்துபட்ட மக்களை இணைத்து நடாத்தப்பட்ட போராட்டமாகும். இந்தியாவின் போராட்டத்தின் பக்க விளைவுகள் இலங்கையிலும் பிரதிபலித்ததாய் இருந்தது என்பதே சாட்சியமாகும்.
ஆங்கிலேயர்களின் பிரித்தானிய நவ காலணித்துவ சுரண்டல் முறமைக்கு தம்மை மாற்றிக் கொண்டு இந்தியாவை விட்டு வெளியேறும் போது இலங்கையையும் விட்டு வெளியேறினர்.
உண்மையில் இலங்கை தனது சுதந்திரத்திற்காக இந்தியா அளவிற்கு போராடவில்லை. ஆனால் இலங்கையின் சுதந்திரத்திற்காக தமிழ் மக்களின் பங்களிப்பும் தியாகங்களும் அளப்பரியதாகும்.
பிரித்தானியரிடம் இருந்து 1948 பெப்ரவரி நான்கில் கிடைத்த சிறிலங்காவின் சுதந்திரம் தமக்கான சுதந்திரம் என்று தமிழர்களால் உணரப்படாமல் தள்ளிப்போனமைக்கான முக்கிய காரணமாக ஆட்சியாளர்களின் விரோத இனத்துவேசம் அமைகின்றது.
பிரித்தானியர் சுதந்திரத்தை வழங்கும் போது இலங்கையின் அனைத்து இனத்தவர்களுக்குமே வழங்கினராயினும் துரதிர்ஸ்டவசமாக இலங்கையின் சுதந்திரம் பெளத்த சிங்களவர்களுக்காக போனது காலத்துயரமே. இந்நிலைமையானது நாட்டின் சுதந்திரம் என்பது இலங்கையில் வாழும் ஒரு
பகுதியினருக்கு என்றாயிற்று.
பிரித்தானியர் இலங்கைக்கு வழங்கிய சுதந்திரத்தை தமதாக்கியவர்கள் நாடும் தங்களுடையது, ஆட்சியும் தமக்கானது என்று முடிவு செய்து, அதை நிலை நிறுத்தப் பல்வேறு நடவடிக்கைகளை சிங்கள அரசுகள் மேற்கொண்டது. அதன் ஒரு அம்சமாக தமிழர்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாக ஆக்கப்பட்டதுடன், தமிழர்களைக் காலத்திற்குக் காலம் வஞ்சித்துத் தண்டிக்க வேண்டும் எனவும் பேரினவாதிகளால் அடிமைப் படுத்தப்பட்டனர்.
சிறிலங்கா சுதந்திரத்திற்கு பின்னரான இலங்கையின் வட கிழக்கு, மலையகம் வாழும் சிறுபான்மையின தமிழ் மக்கள் இரண்டாம் தர பிரஜைகளாக வாழும் நிலைக்கு டதள்ளப்பட்டுள்ளோம் என்ற உணர்வலைகளுக்கு சிங்கள அரசுகளால் உள்ளாக்கப் பட்டனர்.
தமிழர் தாயகத்தில் கரிநாள்:
இவ்வருடமும் சிங்கள அரசின் சுதந்திர நாளான 04.02.2025 அன்று தமிழர் தாயகத்தில் கரிநாள் என பிரகடனப்படுத்தி வடக்கு – கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழினப் படுகொலைக்கு நீதி கோரியும், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கோரியும், அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் எனக் கோரியும் கிளிநொச்சியில் மாபெரும் கறுப்புக்கொடிப் போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பின்வரும் கோரிக்கைகளாக முன்வைத்தனர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு சர்வதேச நீதி வேண்டும். தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
அத்துடன் பௌத்த மயமாக்கல் உடனே நிறுத்தப்பட வேண்டும். தமிழர் தாயக பிரதேசத்தில் தொடர்ச்சியாக நடந்து வரும் நில அபகரிப்பு உடனே நிறுத்தப்பட வேண்டும். தமிழர் தாயக வளத்தை அபகரிப்பது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
தமிழர் தாயக பிரதேசத்தில் இருந்து இராணுவம் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும். தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி விசாரணை வேண்டும். சிவில் செயற்பாட்டாளர்கள் மீதான அச்சுறுத்துதல்கள் நிறுத்தப்பட வேண்டும்.
ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவது நிறுத்தப்பட வேண்டும். எமது நிலம் எமக்கு வேண்டும். தாயகம், தேசியம், அரசியல் சுயநிர்ணயம் என்பன எமது உரிமைகள். அவற்றை உடனே அங்கீகரிக்க வேண்டும்.
வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம் என்பது அங்கீகரிக்கப்பட வேண்டும். சர்வதேசம், வட்டுக்கோட்டை தீர்மானத்தை அங்கீகரிக்க வேண்டும். அத்துடன் எமது தலைவிதியை நாமே தீர்மானிக்க சர்வதேச நியமங்களுக்கு அமைய எமது தாயக பிரதேசத்தில் பொதுசன வாக்கெடுப்பு நடத்துமாறு சர்வதேசத்தை கோருகிறோம் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button