வடக்கில் புலம்பெயர்ந்தவர்கள் முதலிட பெரிதும் விரும்புகின்றனர்

போர் முடிவுக்கு வந்த பின்னர் 2009 ஆம் ஆண்டிலிருந்து வடக்கில் முதலீடு செய்வதற்குப் பலர் முன்வந்தாலும் அவர்களில் பலர் பல்வேறு காரணங்களால் முதலீடு செய்யாமல் திரும்பிச் சென்றுள்ளனர். எனினும், கடந்த ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலுடன் சூழல் மாறியுள்ளது. முதலீட்டாளர்கள் இங்கு வருகின்றார்கள். புலம்பெயர்ந்தவர்கள் அதிகமாக முதலிட விரும்புகின்றனர் என வடக்கு ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.
15 ஆவது வருடமாக யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி-2025 நிகழ்வு யாழ்.முற்றவெளி மைதானத்தில் ஆரம்பமானது.
இந்த நிகழ்வின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
போருக்கு முன்னர் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி விவசாய மற்றும் மீன்பிடி உற்பத்திப் பொருட்கள் விற்பனைக்குச் சென்றனவோ அதேபோன்று மீண்டும் நிலைமை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. விவசாய மற்றும் மீன்பிடி உற்பத்திப் பொருட்களைப் பெறுமதி சேர் பொருட்களாக மாற்றி ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புக்கள் எமக்கு அதிகரிக்கின்றன. இதன் ஊடாக எமது பகுதியைச் சேர்ந்த பலர் வேலை வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.
அதேபோன்று தொழில்நுட்பங்களை நவீன இயந்திரங்களையும், எமது உற்பத்திப் பொருட்களையும் பெருக்குவதற்குப் பயன்படுத்த வேண்டும். சகல வழிகளிலும் சாதகமான சூழல் நிலவும் நிலையில் அதனைப் பயன்படுத்தி வடமாகாணத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
![]()