அரசிற்கு எதிராக போராட்டங்கள்; சஜித்தை சந்தித்த தொழிற்சங்கக் கூட்டணி

அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களை ஆரம்பிக்கப் போவதாக ஐக்கிய ஒன்றிணைந்த தொழிற்சங்கக் கூட்டணி அறிவித்துள்ளது.
பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் நேற்று புதன்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஐக்கிய ஒன்றிணைந்த தொழிற்சங்கக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான ஆனந்த பாலித இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன் போது ஆனந்த பாலித மேலும் கூறுகையில்,
ஐக்கிய ஒன்றிணைந்த தொழிற் சங்கங்களின் கூட்டணியை சேர்ந்த பிரதிநிகள் எதிர்க் கட்சித் தலைவரை சந்தித்தோம். தற்போது அரசாங்கம் தொழில் செய்வோரின் உரிமைகளை ஒடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றது. அவர்களின் கருத்துக்களுக்கு இடமளிக்கப்படுவதில்லை. இதற்கு எதிராக முன்வருமாறு நாங்கள் எதிர்க்கட்சியினரைக் கோரியுள்ளோம்.
அத்துடன் 17 ஆம் திகதி மின்சார கட்டணத் திருத்தம் செய்யப்பட வேண்டும். அதிகளவான வீதத்தால் மின்கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரமாகும்.
கிளீன் ஶ்ரீலங்கா என்று அரசாங்கம் வேலைத் திட்டத்தை முன்னெடுக்கின்றது. வரிகளை அறவிட்டு மக்களின் பைகளை சுத்தப்படுத்துவதா? இந்தத் திட்டத்தின் நோக்கம் என்று கேட்க வேண்டியுள்ளது.
முதலில் மின் கட்டணத்தை குறையுங்கள் என்று அரசாங்கத்தை கேட்கின்றோம். 35 வீதத்தால் மின் கட்டணத்தை குறைக்க முடியும். இந்த நேரத்தில் எமது போராட்டங்களை ஆரம்பிக்கவுள்ளோம். இது தொடர்பிலேயே எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்தோம் என்றார்.
![]()