கவிதைகள்

இரண்டாயிரத்து இருபத்தைந்து இன்பம் கொடுத்து நிற்கட்டும்!… மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

நல்லன நடக்க வேண்டும்
நாடெலாம் சிறக்க வேண்டும்
வல்லமை பெருக வேண்டும்
வாழ்வது உயர வேண்டும்
தொல்லைகள் தொலைய வேண்டும்

தோல்விகள் அகல வேண்டும்
இல்லது என்னும் வார்த்தை
இன்மையாய் ஆதல் வேண்டும்
போரெனும் எண்ணம் மண்ணில்

பொசுங்கியே போதல் வேண்டும்
மாசுடை ஆட்சி மண்ணில்
மடிந்துமே ஒழிய வேண்டும்
ஊழலும் ஒழிய வேண்டும்

உண்மையே நிலைக்க வேண்டும்
வாய்மையின் வழியில் மக்கள்
மண்ணிலே நடக்க வேண்டும்
உழைப்பவர் உயர வேண்டும்

நல்லூதியம் கிடைக்க வேண்டும்
கொடுப்பவர் பெருக வேண்டும்
குவலயம் சிறக்க வேண்டும்
கல்வியில் உயர்வு வேண்டும்

கசடுகள் அகல வேண்டும்
கண்ணியம் என்றும் வாழ்வில்
கட்டாயம் அமர வேண்டும்
அறவழி என்னும் எண்ணம்

அகத்தினில் அமர வேண்டும்
அன்புதான் உயர்வு என்று
அனைவரும் உணர வேண்டும்

ஆன்மீகம் தளைக்க வேண்டும்
அமைதியே நிலவ வேண்டும்
ஆணவ அரக்கன் மண்ணில்
அமிழ்ந்துமே போக வேண்டும்

இரப்பது அகல வேண்டும்

கொடுப்பது உயர வேண்டும்
பொறுப்பது சிறப்பு என்று
விருப்புடன் ஏற்க வேண்டும்

வேற்றுமை அகல வேண்டும்

வெறுப்புகள் ஒழிய வேண்டும்
சமத்துவம் நிலைக்க வேண்டும்
சன்மார்க்கம் தளைக்க வேண்டும்

பண்பது உயரவேண்டும்

பக்குவம் நிறைதல் வேண்டும்
அன்பினைப் பகிர்ந்து மாந்தர்
அனைவரும் இணைதல் வேண்டும்

புது வருடம் அத்தனையும்
சுமந்து கொண்டே வரட்டும்
வரும் அனைத்தும் எங்களுக்கு
வளங் கொடுக்க வரட்டும்

புது வெளிச்சம் காட்டப்

புது வருடம் வரட்டும்
வரு வருடம் நமக்கு
வரங் கொண்டு வரட்டும்

இரண் டாயிரத்து இருபத்தைந்து
இன்பம் கொடுத்து நிற்கட்டும்
நன்றாய் மக்கள் வாழவே
நவமாய் மலர்ந்து பொலியட்டும்

 

 

 

 

 

 

 

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், அவுஸ்திரேலியா

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *