இலங்கை பன்றிகளுக்கு பரவியுள்ள ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல்

மேல் மாகாணத்தின் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த பன்றிகளுக்கு முதல் தடவையாக பதிவாகியிருந்த இனப்பெருக்க மற்றும் சுவாச நோய் ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எடுக்கப்பட்ட புதிய மாதிரிகளை ஆய்வு செய்ததில் இது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் கம்பஹா மாவட்டத்தின் பல பிரதேசங்களில் பன்றிகள் திடீரென இறக்கும் சம்பவங்கள் பதிவாகியிருந்த நிலையில், இது தொடர்பில் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் விசேட விசாரணைகளை மேற்கொண்டிருந்தது.

குறித்த பரிசோதனையின் படி, தெற்காசிய நாடுகளில் சமீபத்தில் பதிவாகிய ஆபிரிக்க பன்றிக்காய்ச்சலுடன் மேற்படி பன்றிகள் தொடர்புபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இலங்கையில் இந்நோய் பதிவாகியிருப்பது இதுவே முதல் தடவையாகும். மேலும் இந்த அதிதீவிர நோய்க்கிருமி ஏனைய பகுதிகளுக்கு பரவாமல் தடுப்பதற்காக அந்தந்த பகுதிகளில் உள்ள கால்நடை அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதன்படி, பிரதேச செயலகங்களுக்கு இடையில் பன்றி இறைச்சி விநியோகத்திற்காக, பிரதேச சுகாதார அதிகாரிகளின் அனுமதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் கால்நடை அமைச்சு தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button