இந்தியா

பெரும் இராஜதந்திர நெருக்கடி; இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கும் கனடா?

ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை தொடர்பில் இந்தியா மற்றும் கனடாவிற்கு இடையில் இராஜதந்திர நெருக்கடி அதிகரித்துள்ள பின்னணியில் இந்தியா மீதான பொருளாதாரத் தடைகள் சாத்தியமானது என கனேடிய வெளியுறவு அமைச்சர் மெலானி ஜோலி தெரிவித்துள்ளார்.

இந்தியா மீதான சாத்தியமான தடைகள் பற்றி கேள்வியெழுப்பிய போது, “அனைத்தும் தயார் நிலையில் இருப்பதாக” அமைச்சர் ஜோலி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கனேடிய குடிமக்களை குறிவைக்கும் குற்றச் செயல்களுக்கு இந்தியா ஆதரவளிப்பதாக அந்நாட்டு பிரதமர் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சுமத்தியிருந்தார்.

பொதுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான நடவடிக்கைகளில் இந்தியாவின் முகவர்கள் ஈடுபட்டிருப்பதற்கான “தெளிவான ஆதாரங்கள்” குறித்து ஜஸ்டின் ட்ரூடோ கவலை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், இந்தியாவிற்கு எதிராக பொருளாதார தடைகளை விதிப்பது, கனடா காலில் தன்னைத்தானே சுட்டுக்கொள்வது போன்றது என பொருளாதார வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் இன்போமெரிக்ஸ் மதிப்பீடுகளின் பொருளாதார நிபுணர் சங்கநாத் பந்தோபாத்யாய் கருத்து வெளியிடுகையில்,

“கனேடிய வணிகங்கள் இந்தியாவில் அதிக அளவில் முதலீடு செய்துள்ளன, அதன் வளர்ச்சி மற்றும் வருமானம் அதிகமாக உள்ளது. கனடிய ஓய்வூதிய நிதிகள் இந்தியாவில் 75 பில்லியனுக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளன.

600க்கும் மேற்பட்ட கனேடிய நிறுவனங்கள் இந்தியாவில் உள்ளன, மேலும் 1,000 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்திய சந்தையில் தீவிரமாக வணிகத்தைத் தொடர்கின்றன” என்று பந்தோபாத்யாய் சுட்டிக்காட்டினார்.

பொருளாதாரத் தடைகள் விவசாயத் துறையில், குறிப்பாக இந்தியாவிற்கு கனடாவின் பருப்பு ஏற்றுமதியில் எவ்வாறு பின்னடைவை ஏற்படுத்தும் என்பதை அவர் எடுத்துரைத்தார்.

“கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பருப்புகளின் முக்கிய ஆதாரமாக இந்தியா உள்ளது. கனடா, அவுஸ்திரேலியா போன்ற போட்டியாளர்களிடம் பருப்புக்கான அதன் சந்தைப் பங்கை இழக்கும் அபாயம் உள்ளது.

அவுஸ்திரேலியாவின் பருப்பு உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில் சந்தையில் பெருகிய முறையில் போட்டித்தன்மை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2019ஆம் ஆண்டு முதல், அவுஸ்திரேலியா இந்தியாவுக்கான பருப்பு ஏற்றுமதியை படிப்படியாக அதிகரித்து வருகிறது.

கனேடிய பருப்பு ஏற்றுமதியில் தாக்கம்குறிப்பிடத்தக்கதாக இல்லை என்றாலும், இராஜதந்திர நெருக்கடி இந்திய இறக்குமதியாளர்களின் நம்பிக்கையை சிதைக்கக்கூடும்” என்றார்.

எவ்வாறாயினும், இந்தியாவின் வெளிநாட்டு நேரடி முதலீட்டில் (FDI) அதன் பங்களிப்பு வெறும் 0.57 சதவீதமாக இருப்பதால், இந்தியாவுக்கு எதிராக கனடா சிறிய செல்வாக்கைக் கொண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button