நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டி: ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு அறிவிப்பு

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதாக ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு அறிவித்துள்ளது.

நேற்று திங்கட்கிழமை மாலை யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடக சந்திப்பின்போதே ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு இவ்வாறு அறிவித்துள்ளது.

இது தொடர்பில் அந்தக் கட்டமைப்பினர் வெளியிடுள்ள அறிக்கையில்,

“இன்று தமிழ் தேசிய களத்தில் தூய்மையான மாற்றத்திற்கான மனிதர்களை மக்கள் பிரதிநிதிகளாக நாடாளுமன்றத்திற்கு அனுப்ப தமிழ் மக்கள் விரும்புகின்றனர்.

இளையவர்களும் பெண்களும் நிபுணர்களும் இந்தகே குழுமத்தில் கணிசமான எண்ணிக்கையில் இருக்க விரும்புகின்றனர். அதேநேரம் தமிழ் தேசிய இனம் தன் உரிமைகளை இன்னும் இத்தீவில் பெற்று கொள்ளாத நிலையில் தியாக வேள்வியை கடந்து இன அழிப்புக்கு உள்ளாகி பரிகார நீதியையும் நிரந்திர சமஷ்டி அடிப்படையிலான தீர்வையும் கோரி நிற்கின்ற சூழலில் கட்சி அரசியலைத் தாண்டி தமிழ்த் தேசியக் கொள்கை அரசியல் தளமே முன்னெடுக்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

முதிர்ந்த அரசியல் தலைவர்கள் வழிகாட்ட நிபுணத்துவமும் பல் பரிணாம ஆளுமையும் தமிழ்த் தேசிய பற்றுறுதியும் கொண்ட தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் அணி வடக்கு, கிழக்கில் களம் காண வேண்டும் என்பது இன்று தமிழர்கள் அனைவரது வேணவாக இருக்கின்றது.

கோட்பாட்டுத் தளத்தில் தமிழ் மக்கள் பேரவை, தமிழ் மக்கள் பொதுச் சபை என்பவற்றின் கருத்தாணைகளைத் தமிழ்த் தேசிய அரசியல் சித்தாந்தமாக ஏற்றுக்கொண்டு சமகால வாழ்வியல் விடயங்களையும் உள்வாங்கிய தேர்தல் விஞ்ஞாபனத்தை இந்தத் தமிழ்ப் பொது வேட்பாளர்கள் அணியினர் கொண்டிருப்பர்.

இதற்காக வடக்கு, கிழக்கு தழுவிய தூய தமிழ்த் தேசிய முகங்களை தொகுதி வாரியாக அனைத்து சமத்துவ பிரதிபலிப்புக்களுடன் கண்டறிய உதவுமாறு அனைத்து தமிழ் மக்களுக்கும் அறைகூவல் விடுகின்றோம்.

அனைத்து சிவில் சமுக பிரதிநிதிகள் பல்கலைகழக சமூகம் மாதர் அமைப்புகள் தொழிற்சங்கங்கள் அரசியல் இயக்கங்கள் இதில் தங்கள் பங்களிப்பை இதயசுத்தியுடன் ஆற்ற முன்வருமாறு வேண்டுகின்றோம்.

பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் அடுத்த வாரம் எதிர்நோக்கி இருக்கின்ற இந்த தருணத்தில் வடக்கு, கிழக்கின் திருகோணமலை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், வன்னி, அம்பாறை தேர்தல் மாவட்டங்களை சார்ந்த ஊழலற்ற மது போதை வணிகங்களுடன் சமூக பிறழ்வு நடத்தைகளுடன் எவ்விதத்திலும் தொடர்புபடாத தமிழ்த் தேசியத்திலும் தமிழ் மக்கள் வாழ்வியல் மேம்பாட்டிலும் பற்றுதியான கறைபடியாத மாற்றத்திற்கான தூய தமிழ்த் தேசிய முகங்களை பரிந்துரை செய்யுமாறு வேண்டுகின்றோம். அவர்கள் மக்கள் மன்றில் வெளிப்படுத்தப்பட்டு தமிழ் சிவில் கட்டமைப்புக்களின் ஒப்புதலுடன் பட்டியல் இறுதியாக்கப்படும்.

அவர்கள் தமிழ்த் தேசிய நலனை முன்னிறுத்தும் பொது வேட்பாளர்களாக நாடாளுமன்ற தமிழ் மக்கள் பிரதிநித்த்துவத்திற்கான தேர்தலை எதிர்கொள்வர்.

கட்சி அரசியலைக் கடந்த இந்த திட்ட முன்மொழிவுக்கு அனைத்து தமிழர்களது ஆதரவையும் பங்குபற்றுதலையும் வேண்டி நிற்கின்றோம்.” – என்றுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button