ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தமிழ் பொதுவேட்பாளருக்கும் இடையில் தொடர்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், தமிழ் பொதுவேட்பாளருக்கும் இடையிலான தொடர்பு தற்போது அம்பலமாகியுள்ளதாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

அரியநேத்திரனுக்கு தன்னாலும், சாணக்கியனாலும் அச்சுறுத்தல் இருப்பதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஒருவர் எழுதியுள்ள கடிதமானது தேர்தல் சட்டங்களை மீறும் ஒரு செயற்பாடு என்றும் அதன் பின்னணியில் யார் இருக்கின்றார்கள் என்பதையும் மக்கள் அறிவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

யாழ். ஊடக அமையத்தில் நடத்திய ஊடவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதியின் பாதுகாப்பிற்கும் இளைப்பாறிய ஜனாதிபதிகளுக்கும் பாதுகாப்பாக இருக்கும் பிரதிப் பொலிஸ் அதிபர் தான் அந்தக் கடிதத்தை எழுதி இருப்பார் என்பதை ஊகிக்க முடியும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தமிழ்பொதுவேட்பாளருக்கும் இடையில் இருக்கும் தொடர்பு தற்போது அம்பலமாகிக்கொண்டிருக்கின்றது. ஜனாதிபதியின் நேரடிக் கண்காணிப்பில் இருக்கின்ற பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேர்தல் நேரத்தில் அரியநேத்திரனுக்கு ஆதரவு பெருகுகின்றது என்று குறிப்பிட்டு அதனால் நானும் சாணக்கியனும் அச்சுறுத்தலாக இருக்கின்றோம் என்றும் கடிதம் மூலம் அறிவிக்கின்றார்.

வாக்கெடுப்புக்கான காலம் அண்மித்து இருக்கையில் தான் இக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அரியநேத்திரனுக்கு ஆதரவுபெருகுகின்றது என்று கூறுவதற்கு பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு என்ன அதிகாரம் இருக்கின்றது. இது தேர்தல் சட்டத்தை மீறுகின்ற குற்றமாகும். இது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவுக்கு நான் உத்தியோகபூர்வமாக முறைப்பாடொன்றைச் செய்திருக்கின்றேன்.

ஜனாதிபதியின் அறிவுறுத்தலின்படி பொதுவேட்பாளர் தொடர்பில் அவ்விதமானதொரு பிரமையை உருவாக்குவதற்காக செய்யப்பட்ட ஒரு தேர்தல் குற்றச் செயற்பாடே அக்கடிதமாகும். அதற்கு எதிரான நடவடிக்கையை நாம் எடுத்துள்ளோம். அதில் தேவையில்லாமல் எங்களுடைய பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.

அரியநேத்திரன் பெயர் வருவதற்கு முன்பே தமிழ் வேட்பாளர் என்ற கருத்தியலுக்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தேன். அரியநேத்திரனுக்கும் எனக்கும் தனிப்பட்ட விரோதம் எதுவும் இல்லை. இந்த எண்ணக்கரு மிகத் தவறானது. இந்த எண்ணக் கரு தமிழ் மக்களுக்கு ஒரு அபாயமான விடயம். இது தமிழ் மக்களின் அரசியல் தற்கொலைக்கு சமனானது இதனை நாங்கள் எதிர்க்கின்றோம்.

தேர்தலில் ஒருவரை எதிர்ப்பது சாதாரண விடயம் இது சகஜமான விடயம் அதைக் கடிதத்தில் எழுதவேண்டிய தேவை இருக்கும் என்பது எனக்குத் தெரியவில்லை. என்னை எல்லோருக்கும் தெரியும்் எனக்கும் வன்முறைக்கம் வெகு தூரம் என்பதும் எல்லோருக்கும் தெரியும்் உண்மையிலே என்னில் வைக்கப்படும் குற்றச்சாட்டே அது தான் நான் வன்முறைக்கு ஆதரவாக இல்லை என்பதுதான் குற்றச்சாட்டாகவே கூறிக்கொண்டிருக்கின்றார்கள்.

அப்படிக் கூறிவிட்டு அவருக்கு உயிர் ஆபத்து, இவர் என்னை எதிர்க்கின்றார் என்று கூறி ஒரு கேலிக்கூத்தாக செயற்படுவது அவர்களுடைய அரசியல் வங்குரோத்துத் தன்மையை வெளிப்படையாக கூறி நிற்கின்றுது. இதற்கு எதிரான சட்ட நடவடிக்கையை எடுப்பேன். இப்படியான ஒரு கடித்தை எழுத வைத்து எந்த மக்கள் ஆதரவு இல்லாத ஒருவருக்கு மக்கள் ஆதரவு இருக்கின்றது என்று புலனாய்வு தகவல் என்று கூறி பெரிய விடயமாக கூறிவருகின்றார். இதில் இருந்து அவர்கள் யாருடைய முகவர்கள் என்று அம்பலமாகி வருகின்றது. இதனை வெளிப்படுத்தவே இந்தச் சந்திப்பை மேற்கொண்டேன் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button