ஆஸியில் அகதிகள் விடுதலைக்காக தொடர் சைக்கிள் ஓட்ட போராட்டம் !

அவுஸ்திரேலியாவில் நிரந்தர வதிவிட உரிமை வழங்கக் கோரி பதின்னான்கு வருடங்களாக காத்திருக்கும் அகதிகள் விடுதலைக்காக தொடர் சைக்கிள் ஓட்ட போராட்டம் நடைபெற்றுள்ளது.

இறுதிப் போர் 2009ம் ஆண்டுகளின் பின்னர் தமது சொந்த மண்ணில் வாழ நிர்க்கதியற்று அவுஸ்திரேலியாவிற்குப் புலம்பெயர்ந்துள்ள தமிழ் அகதிகள் கடந்த 12-14 வருடங்களாக நிரந்தர வதிவிட உரிமை வழங்கப்படாது தொடர்ந்தும் அந்நாட்டு அரசாங்கத்தினால் தாம் வஞ்சிக்கப்படுவதாக கூறுகிறார்கள்.

இவர்களின் விடுதலைக்காக தொடர் சைக்கிள் ஓட்ட போராட்டம் நடைபெற்றுள்ளது. பிரிஸ்பேர்ன் மாநகரில் இருந்து கன்பரா நோக்கி 1400 கிலோ மீட்டர் தூரத்தை 18 நாட்களாக தினுஷன் சந்திரசேகரம் எனும் தமிழ் வாலிபன் சைக்கிளில் ஓடியுள்ளார்.

தமிழ் அகதிகள் தமது சொந்த நாட்டிற்கு மீளத்திரும்ப முடியாத உயிர்ப் பாதுகாப்பின்மை ஒருபுறம் புகலிடக்கோரிக்கைகள் மறுக்கப்பட்டு நிரந்தர வதிவிட உரிமையற்ற அங்கலாய்ப்பும் தமது குடும்ப உறுப்பினர்களோடு சேர்ந்து வாழ முடியாத கையறு நிலையுமாக தொடர்ச்சியான உளச்சிதைவுகளால் இவர்கள் துவண்டு போயிருக்கின்றார்கள்.

போராட்டமே வாழ்வாகிப் போன தாம் வேறுவழிகளன்றியே இந்த அமைதி வழியிலான போராட்டத்தை முன்னெடுத்து வருவதாகவும், தமக்கு நிரந்தர விசா வழங்கப்படும் வரையிலும் தாம் தமது போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை எனவும் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கூறுகின்றார்கள்.

எனவே இப்போராட்டம் வெற்றியளித்து தமக்குரிய வாழ்வுரிமை கிடைப்பதற்காக அவுஸ்திரேலியா உள்ள அனைவரினதும் ஒத்துழைப்பினையும் வேண்டுவதோடு தமது போராட்டக்களத்திற்கு அனைவரையும் அணிதிரண்டு வந்து உறுதுணையாக நிற்குமாறும் வேண்டுகோள் ஒன்றினையும் முன்வைக்கின்றார்கள்.

இவ்வருடமும் தொடர் சைக்கிள் ஓட்ட போராட்டம் மீண்டும் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button