42 பெண்களைக் கொலை செய்த வழக்கு: சிறையில் இருந்து முக்கிய சந்தேகநபர் தப்பியோட்டம்

தனது மனைவி உட்பட 42 பெண்களைக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட கென்ய தொடர் கொலையாளி காலின்ஸ் ஜுமைசி (33) காவலில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.

ஜுமைசி உட்பட 13 கைதிகள் காவல் நிலைய அறையில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்குவதற்காக பொலிஸார் சிறை அறைக்கு சென்றபோது இந்த சம்பவம் தெரியவந்தது.

ஜுமைசியுடன் தப்பியோடிய மேலும் 12 பேர் சட்டவிரோத குடியேற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் எரித்திரியா வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

42 பெண்களை கொலை செய்ததாக கூறப்படும் ஜுமைசி ஜூலை 14 அன்று கைது செய்யப்பட்டார். ஜுமைசியின் வீட்டின் அருகே உள்ள குவாரியில் இருந்து ஒன்பது பெண்களின் சிதைந்த உடல்களை பொலிஸார் மீட்டனர்.

யூரோ கோப்பை இறுதிப் போட்டியை பார்த்துக் கொண்டிருந்த போது அவர் கைது செய்யப்பட்டார். 2022 ஆம் ஆண்டுக்குப் பிறகு 42 பெண்களைக் கொன்றதாக அவர் ஒப்புக்கொண்டார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பிராந்திய தலைமையகம் மற்றும் பல தூதரகங்கள் அமைந்துள்ள ஜிகிரியின் நைரோபி மாவட்டத்தில் இந்த காவல் நிலையம் அமைந்துள்ளது.

எவ்வாறாயினும், ஆறு மாதங்களில் ஒரு முக்கிய வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் காவலில் இருந்து தப்பிப்பது இது இரண்டாவது முறையாகும்.

கடந்த ஆண்டு, தனது காதலியைக் கொன்று விமான நிலைய கார் பார்க்கிங்கில் சடலத்தை விட்டுச் சென்றதாகக் கூறி கைது செய்யப்பட்ட கென்யக் குடிமகன் கெவின் காங்கேதே பொலிஸ் காவலில் இருந்து தப்பிச் சென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button