முச்சந்தி

கறையான் அரித்த 25 கோடி பெறுமதியான அமெரிக்க டொலர்கள்: முன்னாள் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கு சொந்தமானது என உறுதி

ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கு இதற்கு முன்னர் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நன்கொடையாளர்களிடம் இருந்து பெறப்பட்ட இலங்கை ரூபாயில் சுமார் 25 கோடி ரூபா பெறுமதியான அமெரிக்க டொலர்களை இரகசியமாகப் பாதுகாப்பாக வைப்பிலிட்டுள்ள நிலையில் அவை கறையானால் அரித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையின்படி, சமீபத்தில் குறித்த முன்னாள் வேட்பாளரின் வேண்டுகோளுக்கு இணங்க, பிரதானி ஒருவரின் தலையீட்டின் மூலம் கறையான் அரித்த டொலர் நோட்டுகளுக்குப் பதிலாக புதிய டொலர் நோட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் வேட்பாளருக்கு ஆதரவைப் பெறுவதற்காக குறித்த பிரதானி இவ்வாறு உதவி செய்துள்ளதாக தெரியவருகிறது.

முன்னாள் வேட்பாளருக்கு கடந்த ஜனாதிபதி தேர்தலில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நன்கொடையாளர்களிடமிருந்து பெறப்பட்ட இந்த டொலர்களை நீதிமன்ற நடவடிக்கையின் பின்னரே பெற்றுக்கொள்ளப் பட்டதாகக் கூறப்படுகின்றது.

அதன்படி, டொலர்களை மீட்பதற்காக நேற்று முன்தினம் டொலர்கள் வைப்பிலிடப்பட்டுள்ளதை பரிசோதித்த போது கறையான்கள் அவற்றை அரித்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதன்பின், அந்த டொலர்களை புதிய நோட்டுகளாக மாற்ற, குறித்த பிரதானியிடம் வேட்பாளர் உதவி கேட்டதாக கூறப்படுகிறது.

அண்மைய நாட்களில் அரசியல் மேடையில் பல இடங்களில் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளரின் இந்த டொலர் சம்பவம் பேசப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button