கப்பல் மோதியதில் இடிந்து விழுந்த பாலம்: 11 வாரங்களின் பின் மீளவும் போக்குவரத்திற்கு அனுமதி

சரக்கு கப்பல் மோதி பாலம் இடிந்து விழுந்தமையால் தடைப்பட்டிருந்த பால்டிமோர் துறைமுக கப்பல் போக்குவரத்து பாதை மீளவும் திறக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 26ஆம் திகதி இலங்கை நோக்கி வந்த டாலி என்ற சரக்கு கப்பல் மோதியதில் மேரிலேண்ட் மாகாணத்தில் உள்ள Francis Scott பாலம் முற்றிலும் இடிந்து விழுந்தது.
இந்த விபத்தில் ஆறு பேர் கொல்லப்பட்டனர். அத்துடன், அமெரிக்காவின் வடகிழக்கு பகுதிக்கான முக்கிய போக்குவரத்து முற்றிலுமாக தடைப்பட்டிருந்தது.
இந்நிலையில், குறித்த பகுதியில் இருந்து சுமார் 50 ஆயிரம் தொன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாகவும், குறித்த பகுதி கப்பல் போக்குவதற்திற்கு ஏற்றவகையில் ஆளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆற்றுப்படுகை கப்பல் போக்குவரத்துக்கு பாதுகாப்பானது என சான்றளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே 20ஆம் திகதி விபத்துக்குள்ளான டாலி கப்பல் பாதுகாப்பாக அகற்றப்பட்டதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையிலேயே, பால்டிமோர் துறைமுகத்திற்கான கப்பல் போக்குவரத்துக்கு பாதை மீளவும் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், குறித்த பாலத்தை மீண்டும் கட்டுவதற்கு 1.7 பில்லியன் டொலர் முதல் 1.9 பில்லியன் டொலர் வரை செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
2028ஆம் ஆண்டு இலையுதிர்காலத்தில் கட்டுமான பணிகள் முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
![]()