கவிதைகள்

“எரிமலை” …. கவிதை …. சோலச்சி.

நாளை என்ன நடக்குமோ

தெரியலயே ராசாத்தி

நடுச்சாமத்தில் தேசத்தை ஏமாத்தி

நாளெல்லாம் பகலை இருளாக்கி

ஒற்றுமையை பொய்யாக்கி – நம்

உணர்வுகளை பொடியாக்கி…!

 

அதிகாரம் கழுகாக்கி

ஆறுகளை அழுக்காக்கி

அனைவரையும் புழுவாக்கி

மதவாதம் தலைதூக்கி

திரியுதே ராசாத்தி

ஆணவம் அழித்தொழிக்க

ஆவேசமாய் வா

கை உயர்த்தி….!

 

கட்டுற வேட்டியில ஆயிரம் வேறுபாடு

உண்ணுற உணவுல ஓராயிரம் வேறுபாடு..!

கும்புடுற சாமியில கோடிக்கணக்கான வேறுபாடு

குடும்ப கலாச்சாரமோ

கணக்கில்லா வேறுபாடு…!

 

சிவனுக்கு ரெண்டு புள்ளனு

தெற்கே சொல்லுறாங்க…

ஒத்தப்புள்ளதானு ஓங்கி

வடக்கே கூவுறாங்க…!

 

மண்ணு கூட ஏடாகூடமா கெடக்குது

ஓடுற தண்ணி கூட

ஒருபக்கமே படுக்குது….!

 

பேச்சுமொழி வேறவேற

எழுத்துமொழி அதுவும் வேற…!

 

எல்லாமே மாறிக் கெடக்குது

இருந்தும் மனுசனாக

தேசம் ஒன்னா இருக்குது….!

 

ஒரே நாடு ஏத்துக்கிட்டு

வருசம் பல ஆச்சு புள்ள

ஒரே மொழி திணிக்கிறாங்க

நம்ம இரத்தம் கொதிக்கிது உள்ள….!

 

ஒரே ரேசன் ஒரே மதம்

ஒரே மொழி ஒரே சாமி

ஒரே கட்சி

கடைசியில் ஒரு உசுரும்

இல்லாமல்தான் ஆக்கப் போறாங்க

ஒரேயடியாக நம்மைத்தானே

அழிக்கப் போறாங்க…..!

 

இங்கு எரிமலைகள் இல்லையென

சொல்லுறாங்களே…

நீயும் நானும் கொதித்தெழுந்தால்

அடங்குவாங்களே….!

– சோலச்சி புதுக்கோட்டை

Loading

2 Comments

  1. உண்மையை உரைக்க கூறிய சொற்கள் , பூ பிடி கொண்ட கத்தி போல பாய்கிறது .

    பூலை இரசிப்பதா ? கத்தியைக் கண்டு அஞ்சுவதா ?

    எல்லோரும் போல அருமை என்றே முடிக்கிறேன் . அருமை சார்.

  2. அருமை.. ஆமா அந்த ராசாத்தி யாருப்பா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button