தங்கம் விற்கும் விலையில் 3 பவுன் தங்க செயினை விழுங்கிய வளர்ப்பு நாய்- பேதி மாத்திரை கொடுத்து மீட்ட உரிமையாளர்

இந்தியாவில் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்து கொண்டே செல்கிறது. 25 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பவுன் ரூ. 5 ஆயிரத்திற்கு விற்பனை ஆனது. ஆனால் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.5500-க்கும் அதிகமாக விற்பனை ஆகிறது. நாளுக்கு நாள் விலை உயர்ந்து கொண்டே போவதால் நகை வாங்குவதே குதிரை கொம்பாக மாறிவிடும் நிலை உருவாகி உள்ளது. இதனால் பெண்கள் இருக்கும் நகையை பாதுகாத்து கொள்வதில் கண்ணும் கருத்துமாக உள்ளனர். இந்த நிலையில் பாலக்காடு, ஓலவக்கோட்டை பகுதியை சேர்ந்த கிருஷ்ணதாஸ் என்பவரின் மனைவி பேபி, தான் அணிந்திருந்த 3 பவுன் செயினை வீட்டின் கண்ணாடி முன்பு கழற்றி வைத்திருந்தார்.

சிறிதுநேரம் கழித்து பார்த்த போது அந்த நகையை காணவில்லை. பதறி போன அவர் வீடு முழுவதும் தேடி பார்த்தார். எங்கு தேடியும் நகையை காணவில்லை. வீட்டுக்கு யாரும் வரவும் இல்லை. நகையும் படுக்கை அறையில் உள்ள கண்ணாடி முன்புதான் இருந்தது. அதன்பிறகு நகை எப்படி மாயமானது என்று தெரியாமல் பேபி குழம்பி போனார். அப்போதுதான் வீட்டில் அவர் வளர்த்து வந்த செல்ல நாய் படுக்கை அறைக்குள் சென்று விட்டு வெளியே வந்தது. அப்போது அந்த நாய் தரையில் கிடந்த பென்சில் ஒன்றை அப்படியே விழுங்கியது.

இதை பார்த்த பேபிக்கு நாய் தான் தனது நகையை விழுங்கி இருக்குமோ? என்ற சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவர் கணவரிடம் இதுபற்றி கூற, அவர் நாயை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு நாயின் வயிற்றை எக்ஸ்ரே எடுத்து பார்த்தார். இதில் நாயின் வயிற்றில் செயின் இருப்பது தெரியவந்தது. உடனே நாய்க்கு பேதி மாத்திரை கொடுக்கப்பட்டது. அதன்பின்பு நாயை வீட்டுக்கு கொண்டு சென்று அது எங்கேயும் வெளியே சென்றுவிடாமல் வீட்டில் இருந்தோர் கண்காணித்தனர். மறுநாள் அந்த நாயின் வயிற்றில் இருந்து 3 பவுன் தங்க செயின் வெளியே வந்தது. அதன்பின்பே பேபிக்கும் அவரது குடும்பத்தாருக்கும் நிம்மதி வந்தது. ஆமாம் 3 பவுன் நகையின் இன்றைய விலை ரூ.1¼ லட்சத்துக்கும் அதிகம்தானே…

 

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button