நித்யானந்தா தொடர்ந்து தனது தாய்நாட்டால் வேட்டையாடப்படுகிறார்….. ஐநாவில் கைலாச பிரதிநிதி புகார்!

நித்யானந்தா தனது தாய்நாடான இந்தியாவால் தொடர்ந்து துன்புறுத்தப்படுகிறார்; என ஐக்கிய நாடுகள் சபையில் ‘கைலாச பிரதிநிதி’ குற்றச்சாட்டை எழுப்பி உள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் நித்யானந்தாவை இந்தியா வேட்டையாடுவதாக கைலாச பிரதிநிதி புகார் கூறி உள்ளார்.

2010-ம் ஆண்டு கர்நாடக அமர்வு நீதிமன்றம் நித்யானந்தாவுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்தது. இவர் மீது குஜராத்தில் ஆசிரமத்தில் இருந்து குழந்தைகளை கடத்திய வழக்குகளும் உள்ளன. மேலும் நித்யானந்தா மீது பாலியல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பதிவான பலாத்கார வழக்குகளில் இருந்து தப்பிய நித்யானந்தா நாட்டை விட்டு வெளியேறினார். பின்னர் தனக்கென கைலாச என்ற ஒரு நாட்டை உருவாக்கி கொண்டு அங்கு வாழ்கிறார்.ஆனால் அந்த நாட்டின் சரியான இடம் இன்னும் கண்டறியப்படவில்லை. இதற்கிடையில் ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் கலாச்சார உரிமைகளுக்கான 19 வது மாநாட்டின் 73 வது கூட்டம் நடைபெற்றது. இதில் கைலாச நாட்டின் அமெரிக்காவின் பிரதிநிதியாக மாவிஜயபிரியா நித்யானந்தா கலந்து கொண்டார்.

இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபையின் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோவில் மா.விஜயபிரியும் கூட்டத்தில் பங்கேற்பதைக் காணலாம்.

முடிவெடுக்கும் அமைப்புகளில் பெண்களுக்கு சமமான முக்கியத்துவம் என்ற தலைப்பில் நடந்த கூட்டத்திலும் அவர் கலந்து கொண்டார் கூட்டத்தில், மா.விஜயபிரியாவை கைலாச நாட்டின் நிரந்தர தூதர் என்று வர்ணிக்கப்பட்டார். நிலையான வளர்ச்சி இலக்குகள் (எஸ்டிஜி) விவாதிக்கப்பட்ட கூட்டத்தில் பேசிய விஜயப்ரியா, தனது நாட்டை நிறுவிய நித்யானந்தா தனது தாய்நாட்டால் துன்புறுத்தப்படுவதாக குற்றம் சாட்டினார்.

மேலும் கூட்டத்தில் பேசும் போது கூறியதாவது;- கைலாச நாடு ‘இந்து மதத்தின் முதல் இறையாண்மை அரசு. கைலாசம் இந்து மதத்தின் பெரிய குருவான நித்யானந்த பரமசிவாவால் நிறுவப்பட்டது. நித்யானந்தாவும், ஆதி சைவரும் இந்து நாகரிகத்தையும், இந்து மதத்தின் 10,000 மரபுகளையும் பழங்குடி விவசாய பழங்குடியினரையும் இணைத்து புதுப்பித்து வருகின்றனர். இந்த பழங்குடியினரின் தலைவர் நித்யானந்தா கைலாசத்தின் இந்துக் கொள்கைகள் நிலையான வளர்ச்சிக்கு உகந்தவை.

பெரிய குரு நித்யானந்தாவை அவரது சொந்த மண்ணிலிருந்து நாடு கடத்தினர். கைலாசத்தில் நித்யானந்தா மற்றும் 20 லட்சம் இந்துக்கள் துன்புறுத்தப்படுவதை தடுக்க சர்வதேச அளவில் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும். உலகில் சுமார் 150 நாடுகளில் தங்கள் நாட்டின் தூதரகங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இருக்கின்றன என கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button