அழுகும் தோல்… அல்லாடும் இளைஞர்கள்…. அமெரிக்காவை அச்சுறுத்தும் ஜாம்பி போதைப்பொருள்!

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்திற்கு அடுத்து போதைப்பொருள் பயன்பாடு அரசுக்கு பெரிய தலைவலியாக மாறியுள்ளது. அந்த வகையில் இப்போது ஜாம்பி போதைப் பொருள் பிரபலமாகி வேகமாகப் பரவி வருகிறது. ஹெராயினுக்கு பதிலாகவே முதலில் இதைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். அதன் பின்னரே இதன் பயன்பாடு அதிகரித்துள்ளது.

டிராங்க் டோப் எனப்படும் இந்த ஜாம்பி போதைப்பொருளை பயன்படுத்தினால் மிக மோசமான பக்க விளைவுகள் ஏற்படுகிறது. இதை எடுத்துக் கொண்டால் மயக்க மருந்தை எடுத்துக் கொண்டது போல இருக்குமாம். தீவிர தூக்கம், மன அழுத்தம், மூச்சு விடுவதில் சிரமம் மற்றும் கை, கால்களில் மோசமான புண்கள் ஏற்படுமாம். அதனை அப்படி கவனிக்காமல் விட்டால் தோல் முழுவதும் பாதிப்படைந்து அழுகிவிடுமாம்.

இந்த போதைப் பொருளை பயன்படுத்தியதும் உச்சகட்ட போதை அடைவதால், அதனை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. போதை தலைக்கேறினால் அவர்கள் எங்கு இருக்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்றெல்லாம் நினைவில் இருக்காதாம். ஜாம்பிக்கள் போல சாலைகளில் ஒரு சிலர் சுற்றித்திரியும் வீடியோ வெளியான நிலையில், அவர்கள் இந்த போதைப் பொருளை பயன்படுத்தியவர்கள் என தெரியவந்துள்ளது.

ஜாம்பி போதைப்பொருள் பழக்கம் முதலில் பிலடெல்பியாவில் தோன்றியிருக்கலாம் என தெரிகிறது. தற்போது, அமெரிக்கா முழுவதிலும் உள்ள முக்கிய நகரங்களில் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்துகிறது.

டிராங்க் டோப் என்பது அமெரிக்காவின் இளைஞர்களின் வாழ்வை அழித்த பென்டானில் போதைப்பொருள் மற்றும் சைலாசின் என்ற கால்நடை மருந்தின் கலவையாகும். சைலாசின் என்பது, கால்நடை மருத்துவ பயன்பாட்டிற்காக உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மனிதர்களுக்கு பயன்படுத்தக்கூடாது. இந்த மருந்தை அதிகமாக உட்கொண்டால், மிகப்பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button