கதைகள்

வாழ்வே மாயம்!… ( சிறுகதை ) …. சங்கர சுப்பிரமணியன்.

 கலைச்செல்வனின் ஐந்து வயது மகள் கவிதாயினி அவன்மடியில் உட்கார்ந்து சிரிக்கும்போது அவளின் குறுகுறுத்த கண்கள் மட்டும் வாழ்வே மாயம் என்று கவிதாவை அவனுக்கு நினைவூட்டியது. மறந்த அந்த இனிமையான நினைவுகளை ஏனோ அவனால் மறைத்துவைக்க முடியவில்லை.கவிதா தென்காசி செல்கிறாள். கலைச்செல்வன் அவளை வழியனுப்ப வந்துள்ளான். கலைச்செல்வனின் குடும்பம் கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாக பெங்களூரில் வசித்து வருகிறார்கள். பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதி முடித்திருந்த கவிதா விடுமுறையில் உறவினர்களான கலைச்செல்வன் வீட்டுக்கு வந்திருக்கிறாள். வந்து சில வாரங்களேமுடிந்து இருக்கும். உடனே புறப்பட்டு வரும்படி கடிதம் வந்ததால் இன்னும் சில வாரங்கள் விடுமுறை இருந்தும் கவிதா உடனடியாக செல்லும் சூழ்நிலை ஏற்பட்டது.கலைச்செல்வன் கல்லூரியில் தகவல் மற்றும் தொழில்நுட்பம் பயின்று இரண்டு ஆண்டுகளாக நிறவனமொன்றில் பணியாற்றுகிறான். கவிதாவும் அதே படிப்பை படிக்க விரும்பியதால் அதுபற்றி அறிந்துகொள்ள பெரும்பாலான நேரத்தை அவனுடன் கழித்தாள். சிறுவயதிலேயே இருவரும் ஒருவரையொருவர் பார்த்திருந்தபோதும் தற்போது அவளைப் பார்த்தஅவனுக்கு ஏதோதோ நினைவுகள் வந்து போயின. அவளுக்கும் அதேநிலைதான். அவர்கள் படிப்பு சம்பந்தமாக வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தாலும் அதையும் தாண்டி ஒரு ஈர்ப்பு அவர்களுக்குள் ஏற்பட்டதை இருவராலும் உணரமுடிந்தது.பெங்களூரு தொடர்வண்டி நிலையத்திற்குஎதிரேயிருந்த பெங்களூரு மாநகர பேருந்து நிலையத்தில் செங்கோட்டை செல்லவேண்டிய ஆறுமணி தமிழ்நாட்டு பேருந்து தயாராக நின்று கொண்டிருந்தது. அரைமணி நேரத்துக்கு முன்பாகவே வந்திருந்த கவிதாவும் கலைச்செல்வனும் பேருந்தினுள் சென்று அமர்ந்தார்கள்.அவர்களுக்கிடையே ஏற்பட்ட ஈர்ப்பின் வெளிப்பாட்டை பேருந்தில் காணமுடிந்தது. யாருமில்லாத பேருந்தில் நெருக்கமாக இருந்த அவர்களின் கைகள் ஒன்றுடன்ஒன்று இணைந்திருந்தன. இருவரது கண்களும் கலங்கி மனம் சோர்ந்து இனம்புரியாத கவலையில் உழன்றுகொண்டிருக்க தழுதழுத்த குரலில்,“என்னை மறந்து விடமாட்டீர்களே? என்று கேட்டாள் கவிதா.“மறக்க முடியுமா?”பதிலளித்தான் கலைச்செல்வன்.“மறக்கமுடியாத அளவுக்கு பழகியிருக்கிறோமா?”“ஆம். ஆனால் இனிமேலும் இப்படி நம்மால் பழகமுடியுமா?”“ஏன்? என்னைத்தேடி நீங்கள் ஊருக்கு வரமாட்டீர்களா?” என்றாள்.“என்னை அவ்வளவுக்கு பிடித்திருக்கிறதா?”“ஏன், அது உங்களுக்கு புரியவில்லையா?” என்று கேட்டவள் அவன் கண்களைப் பார்த்தாள்.அவனும் அவள் கண்களைப் பார்க்க இருவரும் தங்களை மறந்தனர்.திடீரென பேச்சுச் சத்தத்துடன் ஆட்கள் பேருந்தில் ஏறுவதை உணர்ந்தவர்கள்சுதாரித்துக் கொண்டு விலகியதோடு பிணைந்திருந்த கைகளையும் விடுவித்துக் கொண்டனர்.அதன் பின் மளமளவென்று பேருந்தில் பயணிகள் ஏற கலைச்செல்வியின் பக்கத்து இருக்கையில் அமரக்கூடிய ஒரு நடுத்தர வயது பெண்ணும் வந்துவிட அவன் எழுந்து இடமளிக்க வேண்டியிருந்ததால் அவளிடம் விடைபற்று பேருந்திலிருத்து கீழே இறங்கினான்.கீழே இறங்கியவன் அவள் இருக்கை சன்னல் ஓரம் இருந்ததால் அவளின் எதிரில் வந்து நின்றான். அவளைப்பார்த்தான். அவள் அவனை நீர்நிரம்பிய கண்களுடன் பார்த்துக்கொண்டிருந்தாள். அவனது கண்களிலிருந்தும் கண்ணீர் திரண்டுநிற்ககைக்குட்டையால் கண்ணீரைத் துடைத்தவன் கவிதாவின் கண்ணீரையும் துடைத்துவிட அவள் கையை நீட்டவும் கையை அழுத்தமாகப் பிடித்துக் கொண்டான்.இதை பார்த்துக் கொண்டிருந்த வழியனுப்ப வந்த வயதான பெண்மணி,“என்னப்பா, உங்களைப் பார்த்தா திருமணம் ஆனவர்கள்போல தெரியல. அண்ணன் தங்கையா?” என்று கேட்டாள்.“இல்லங்க”“அப்படீன்னா, திருமணம் செஞ்சுக்க போறீங்கள?” அப்பெண்மணிக்கு என்ன பதில் சொல்வதைன்று தெரியாமலேயே ஆம் என்பது போல் தலையாட்டினான். அதைப் பார்த்த கவிதா உள்ளங்கையால் அவனதுஉள்ளங்கையை அழுத்த அந்த அழுத்தம்என்னவெல்லாமோ பொருளுரைத்தன. அந்த அழுத்தம் வெகுநேரம் நிலைக்காதபடி பேருந்து நகரத்தொடங்கவும் கைகள் விலக கலைச்செல்வனின் கையிலிருந்த கைக்குட்டையை வாங்கி கண்களைத் துடைத்த கவிதா கைக்குட்டையை திரும்பத் தரவில்லை. அந்த கைக்குட்டையை ஆட்டியபடியே செல்ல பேருந்தும் கண்ணிலிருந்த மறைந்தது.அதன்பின் ஆறுமாதங்களாக பித்து பிடித்தமாதி இருந்தவன் அவளை மறக்கமுடியாமல் தென்காசி சென்றான்.அவன் வருவதை கடிதம் மூலம் தெரியப்படுத்தியிருந்தான். தெரிந்திருந்தும் கவிதாவை நாகர்கோவிலில் இருந்த பாட்டி வீட்டுக்கு நேற்றுதான்அனுப்பி வைத்திருக்கிறார்கள். என்னைத்தேடி நீங்கள் ஊருக்கு வரமாட்டீர்களா? என்று கேட்டவள் அவளாகவே விரும்பிச் சென்றிருக்கமாட்டாள் என்பதை உணர்ந்தான். தென்காசி வந்து சில நாட்கள் கழிந்தன. கவிதாவின் அம்மா கலைச்செல்வனிடம் வந்து தம்பி இந்தாங்க உங்க கைக்குட்டை. இதைவைத்துக் கொண்டு கவிதா ரெம்பநேரம் எப்போதும் இதையே பார்த்துக்கொண்டே இருக்கிறாள். யாரையும் இந்த கைக்குட்டையை தொடவிடமாட்டாள். உங்களிடம் பத்திரமாகத் திரும்பக் கொடுக்கவேண்டும் என்று பாதுகாத்து வைத்திருக்கிறாள் என்று எண்ணுகிறேன் என்று சொல்லி கைக்குட்டையை கொடுத்தபோது கவிதாவின் அம்மா கண்களில் உண்மை தென்படவில்லை. பெங்களூருக்கு போய் வந்ததிலிருத்து அவள் ரெம்பவே மாறிவிட்டாள். எப்போதும்ஒருமாதிரியாகவே இருக்கிறாள் என்று கவிதாவின் அம்மா சொன்னது மறைமுகமாக எதையோ சொல்லவருவதாக புரிந்தது.அதற்கு மேல் அங்கிருக்க மனமில்லை. சரியான சந்தர்ப்பம் பார்த்து அவள் அறைக்குள் சென்றவன் அவள் உடைகளுடன் கைக்குட்டையை பத்திரமாக வைத்தான். பதினைந்து நாட்கள் வரை தங்கலாம் என்று எண்ணிவந்தவன் ஐந்துநாட்களிலேயே பெங்களூருக்கு திரும்பிக் கொண்டிருந்தான். பேருந்து பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருக்க “நீ இல்லாத உலகினிலே நிம்மதியில்லைஉன் நினைவில்லாத இதயத்திலே சிந்தனையில்லை சிந்தனையில்லை” என்ற பாடல் பேருந்தில் ஒலித்துக் கொண்டிருந்தது.அதன்பின் தொடர்பே இல்லாமலிருக்க சில ஆண்டுகள் கழித்து கவிதாவின் திருமண அழைப்பிதழ் மட்டும் வந்தது. எந்த முன் அறிவிப்புமின்றி இரண்டு நாட்களுக்குமுன்அழைப்பிதழ் மட்டும் வந்ததால் பெங்களூரிலிருந்து யாரும் திருமணத்துக்கு செல்லவில்லை.ஆண்டுகள் பல உருண்டோடி விட்டன. கவிதாவை அவள் பெங்களூரில் இருந்து சென்றபின் சந்திக்கவேயில்லை.-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button