இலங்கை

ஜனாதிபதியை நாமல் காப்பாற்றும் நிலை வரும்; சீலரத்ன தேரர் கூறுகிறார்

எதிர்காலத்தில் ஜனாதிபதியை காப்பாற்ற வேண்டிய நிலை நாமலுக்கு ஏற்படக்கூடும் என ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

அரசியல் நிலைமைகள் மாற்றமடையும் பட்சத்தில் இந்த நிலைமை ஏற்படலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமலை பார்வையிட நேற்று வியாழக்கிழமை சென்று அவரை சந்தித்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நான் இன்று நாமல் ராஜபக்‌ஷவிடம் நலன் விசாரிப்பதற்காக வெலிக்கடை சிறைச்சாலைக்கு வந்தேன். இந்த சந்தர்ப்பத்தில் அனைவரும் சட்டத்துக்கு மதிப்பளிக்க வேண்டும்.

சட்டத்துக்கு நாம் அனைவரும் தலைவணங்க வேண்டும். சட்டம் வலுவிழக்கச் செய்யப்பட்டுள்ள நாட்டில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்போது அனைவருக்கும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பது அனைவரும் அறிந்த விடயமாகும்.

தற்போதைய அரசாங்கம் தங்களுக்கு எதிராக ஏதேனும் செயற்பட்டவர்கள், திருட்டு அல்லது கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் எனக் கருதப்படும் அனைவருக்கும் எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றது. எனினும், சட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது திருடப்பட்டதாகக் கூறப்படும் பணத்தை மீட்டெடுக்க முடியுமா என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அந்தப் பணத்தை மீண்டும் பெற்றுக்கொள்ள முடியுமா என்பதே முக்கியமானதாகும். வழக்குகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது நாமல் ராஜபக்‌ஷ சிறையில் இருப்பதை நாம் பார்க்கின்றோம். அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஏனையவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளும் அந்தந்த முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஆனால் நாமல் ராஜபக்‌ஷ இன்னும் இளைஞராக உள்ளார். சிலவேளை எதிர்காலத்தில் ஜனாதிபதியை காப்பாற்ற வேண்டிய நிலை நாமல் ராஜபக்‌ஷவுக்கு ஏற்படலாம். அதற்குக் காரணம் இது அரசியல் பிரச்சினையாகும். அரசியல் களத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு விதமான மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஒரு பக்கம் இருப்பவர்கள் மறுபக்கம் செல்லலாம்.

அரசியல் நிலைப்பாடுகள் மாறலாம். சுமார் 60 இலட்சம் வாக்குகளில் ஒரு பகுதியினர் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்துள்ளனர். அந்த மக்கள் எதிர்காலத்தில் மீண்டும் தமது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளக்கூடும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

எனவே, சட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது அனைத்து திருடர்களையும் கைது செய்வதற்கும், சட்டத்தின் முன் நிறுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தெரிவு செய்யப்பட்ட சிலரை மட்டும் கைது செய்து சட்டத்தை நடைமுறைப்படுத்துவது போதாது. தொடர்புடைய அனைவரையும் கைது செய்து, சட்டத்தை சரியான முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

அத்துடன், நாட்டுக்கு ஏற்பட்டுள்ள நிதி இழப்புகளை மீட்டெடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டுக்கு கிடைக்க வேண்டிய வருமானத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். சட்டம் அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். யார் தவறு செய்திருந்தாலும் அவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *