கவிதைகள்
“புரட்டாதி மாதம் தெய்வீக மாதம்” …. கவிதை …. மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா …. ( 19-09-2026 சனிக்கிழமை புரட்டாதிச் சனி )

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ….. அவுஸ்திரேலியா

நம்பிக்கை என்பது பொதுவான தாகும்
அவரவர் நம்பிக்கை அவர்கட்குப் பெரிதே
விமர்சனம் செய்பவர் விமர்சனம் செய்வார்
வீண்வாதம் செய்வாரை விட்டுவிட வேண்டும்
ஒவ்வொரு மாதமும் உன்னத மாதமே
ஒவ்வொரு நாளும் உயர்வான நாளே
ஒவ்வொரு நொடியும் உன்னத மாகும்
உணருவார் உணருவார் உணராதார் உணரார்
ஆடியை ஒதுக்குவார் ஆவணி அணைப்பார்
புரட்டாதி தள்ளுவார் ஐப்பசி அள்ளுவார்
ஆடியை அடுத்த புரட்டாதி மாதத்தை
பீடையாய் எண்ணி தள்ளியே வைப்பார்
ஆடி புரட்டாதி அருளான மாதமே
ஆடியை அம்மனின் மாதமாய் நம்புவார்
புரட்டாதி என்றதும் சனியையே எண்ணுவார்
உண்மையில் புரட்டாதி உன்னத மாதமே
பெருமாளைப் போற்றிடும் புரட்டாதி விரதம்
பெருங்கேடை அகற்றும் பேரருள் மாதம்
சனியது தோஷம் நீங்கிட வைக்க
தவறாது பெருமாளைப் போற்றிடும் மாதம்
சனியினால் பற்பல சங்கடம் வருமென
நம்பிடும் பலபேர் நாடெலாம் இருக்கிறார்
சனியது சங்கடம் அகன்றிடும் வகையில்
அமையும் விரதம் புரட்டாதி விரதம்
இந்து ஆலயம் அனைத்திலும் புரட்டாதி
ஹோமம் பூஜைகள் சிறப்பாய் நடக்கும்
விரதம் இருப்பார் வேண்டுதல் வேண்டுவார்
ஆலயந் தோறும் நிறைந்துமே நிற்பார்
சங்கடம் தீர்த்திடு சனி பகவானே
எங்களின் வாழ்வினில் ஏற்றிடு ஒளியென
விளக்குகள் ஏற்றி விநயமாய் வேண்டி
விரதம் இருப்பார் புரட்டாதி மாதத்தில்
காக்கும் கடவுளாம் பெருமாளை வேண்டி
சனியின் சங்கடம் அகற்றிட வேண்டுவார்
பெருமாளின் முன்னே சனியது சங்கடம்
பொடிப் பொடியாகி மறைந்துமே போகும்
புரட்டாதி மாதம் தெய்வீக மாதம்
புரட்டாதிச் சனியும் பொருள்நிறை நாளே
விரதம் இருப்போம் வேண்டுவோம் இறையை
நம்பிக்கை வைப்பார் நல்லதைப் பெறுவார் !
![]()