உலகம்

ஈரான் மீது கடுமையான பொருளாதார தடை – ட்ரம்ப் எச்சரிக்கை

ஈரானின் பொருளாதாரத்தை இலக்காகக் கொண்டு ஒரு புதிய பாரிய நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதேநேரம் ஈரானுக்கு உதவும் அல்லது அதனுடன் வர்த்தகம் செய்யும் எந்தவொரு நாட்டுக்கும் கடும் தண்டனை வழங்கப்படும் எனவும் அவர் நேற்று( 19) தெரிவித்தார்.

உடனடியான இராஜதந்திர அல்லது இராணுவ தீர்வுகள் எதுவும் கண்ணுக்குத் தெரியாத நிலையில், போர் அதன் ஆறாவது மாதத்தை நெருங்கும் வேளையிலேயே இந்த தீவிரப்படுத்தப்பட்ட பொருளாதார அழுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நவம்பர் மாதத் தேர்தல்கள் மிக வேகமாக நெருங்கி வரும் நிலையில், இந்தப் போர் தொடர்பில் ட்ரம்ப் உள்நாட்டிலும் அரசியல் ரீதியான விமர்சனங்களைச் சந்தித்து வருகிறார்.

இது தொடர்பில் ட்ரம்ப் வௌியிட்டுள்ள தகவலில், எந்தவொரு நாட்டிற்கும் எதிராக இதுவரை எடுக்கப்பட்டதிலேயே மிகவும் நசுக்கக்கூடிய பொருளாதார நடவடிக்கையை இன்று நான் அறிவிக்கிறேன்! இது முன்னெப்போதும் இல்லாத அளவிலான பொருளாதாரப் போர் மற்றும் தனிமைப்படுத்தலாக இருக்கும், என்று தனது ‘ட்ரூத் சமூக வலை தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானுக்கு எந்த வகையிலாவது உயிர்நாடியாகச் செயல்படுவதற்குத் தமது நிதி நிறுவனங்கள், வணிகங்கள், விமான நிலையங்கள் அல்லது அரசாங்க நிறுவனங்களை அனுமதிக்கும் எந்தவொரு நாடும் பாரிய பொருளாதார விளைவுகளைச் சந்திக்கும் என்பதையும் நான் அறிவிக்கிறேன், என்று அவர் கூறினார்.

குறித்த நாடுகள் என்ன மாதிரியான தண்டனையை எதிர்கொள்ளும் என்பதை அவர் குறிப்பிடவில்லை, மேலும் ஈரான் தவிர வேறு எந்த நாடும் அவரால் பெயரிடப்படவில்லை.

ஈரானின் மீது உலகம் இதுவரை கண்டிராத வகையில் பொருளாதாரத் தனிமைப்படுத்தலை அமெரிக்கா விதிக்கும் என திறைசேரி செயலாளர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்து சுமார் ஒரு வாரத்தின் பின்னர் ஜனாதிபதியின் இந்தக் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

ஏவுகணைத் தாக்குதல்களில் சமீபத்தில் தற்காலிக அமைதி நிலவிய போதிலும், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான அமெரிக்க-ஈரான் ஒப்பந்தம் முறிந்ததை அடுத்து, அந்த முக்கிய கடல் வழியூடான கப்பல் போக்குவரத்திற்கு ஈரான் தொடர்ந்து ஒரு வலுவான தடையை விதித்து வருகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button