உலகம்

தென் கொரியாவுடனான கூட்டு இராணுவப் பயிற்சிகளை குறைக்க ட்ரம்ப் உத்தரவு

ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளில் பங்கேற்க தென் கொரியா மறுத்ததை சுட்டிக்காட்டி, அந்நாட்டுடனான கூட்டு இராணுவப் பயிற்சிகளை கணிசமாகக் குறைக்குமாறு பென்டகனுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

இராணுவப் பயிற்சிகள் தொடங்குவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பாக, ட்ரூத் சோஷியல் தளத்தில் ட்ரம்ப் வெளியிட்ட பதிவில், பயிற்சிகளை முற்றிலுமாக ரத்து செய்ய காலதாமதமாகிவிட்ட போதிலும், இதில் பங்கேற்க அமெரிக்கா முன்னதாக ஒப்புக்கொண்டதில் தமக்கு மகிழ்ச்சி இல்லை என்றும் கூறியுள்ளார்.

ஆண்டுதோறும் நடைபெறும் ‘உல்சி ஃப்ரீடம் ஷீல்ட்’ (Ulchi Freedom Shield) கூட்டு இராணுவப் பயிற்சிகள் ஒகஸ்ட் 17 முதல் 27 வரை நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளன.

இதில் சுமார் 18,000 தென் கொரிய இராணுவ வீரர்கள் பங்கேற்கின்றனர்.

வட கொரியாவின் வளர்ந்து வரும் திறன்களுக்கு ஏற்ப,ட்ரோன்களை எதிர்கொள்வது, ஜிபிஎஸ் சிக்னல்களை சீர்குலைப்பது மற்றும் இணையத் தாக்குதல்களை முறியடிப்பது போன்ற செயல்பாடுகள் இந்தப் பயிற்சிகளில் இடம்பெறும் என அதிகாரிகள் கடந்த வாரம் தெரிவித்தனர்.

அமெரிக்க ஜனாதிபதி தனது சமூக ஊடகப் பதிவில், வட கொரியத் தலைவர் கிம் ஜொங் உன் உடனான தனது மிகச் சிறந்த உறவையும் சுட்டிக்காட்டினார்.

இந்தப் பயிற்சிகள் அதிக பொருட்செலவை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், டொனால்ட் ஜே.ட்ரம்ப் ஜனாதிபதி இருக்கும் வரை அச்சுறுத்தலற்ற மற்றும் மரியாதைக்குரிய ஒரு நாடாக விளங்கும் ஒரு நாட்டிற்கு, முற்றிலும் பொருத்தமற்ற மற்றும் விரோதமான சமிக்ஞையை காட்டுவதாக அமைவதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானுடனான அமெரிக்க – இஸ்ரேலிய மோதல் குறித்த தென் கொரியாவின் நிலைப்பாட்டையும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஈரானை அணுவாயுதமற்ற நாடாக்கும் முயற்சியில் எங்களுடன் இணைய விரும்புகிறீர்களா என்று தாம் சமீபத்தில் தென் கொரிய ஜனாதிபதியிடம் கோரிய போது, அதற்கு அவர்கள் ‘இல்லை, நன்றி!’ என கூறியதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்தே தென்கொரியாவுக்கு எதிராக கருத்துக்களை அவர் வௌிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button