இலங்கை

ஜனாதிபதிக்கு ஏன் ஆபத்து வரும்?; கேள்வி எழுப்பும் நாமல்

ஆபத்தான சவால்களை தான் எதிர்கொள்வதாக ஜனாதிபதி எந்த அடிப்படையில் கூறுகின்றார் என்று எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. அனுபவம் இல்லாதவர்களை கொண்டுவந்து தான் சிக்கலில் சிக்கிவிட்டேன் என்று ஜனாதிபதி இப்போது நினைக்கின்றாரோ என்று தெரியவில்லை என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுன அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே நாமல் ராஜபக்‌ஷ இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

வசனங்கள் எப்படி இருந்தாலும் செயற்பாடு தொடர்பிலேயே பிரச்சினை உள்ளது. ஜனாதிபதி தெளிவாக நீதித்துறையின் சுயாதீனத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் விடயம் தொடர்பில் தான்தோன்றித்தனமான தீர்மானத்தை எடுக்கின்றார். தான் துறைசார் சிரேஷ்ட மற்றும் முக்கியஸ்தர்களின் ஆலோசனைகளை பெற்றதாக ஜனாதிபதி கூறியுள்ளார். இவ்வாறு ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கும் சிரேஷ்ட மற்றும் முக்கியஸ்தர்கள் யார்? சட்டத்தரணிகள் சங்கம், நீதிபதிகள் மற்றும் பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கம், ஐ.நா.இதற்கு எதிரான நிலைப்பாடுகளை கூறுகின்றதென்றால், இது தொடர்பில் தெளிவான பார்வை இல்லையென்றால், இது நீதித்துறைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஜனாதிபதிக்கு அவர்கள் கூறுவார்களாக இருந்தால் ஜனாதிபதி எதிர்கொள்வதாக கூறும் ஆபத்தான சவால்களை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.

ஆனால் ஜனாதிபதி எவருடையதோ அவதானத்தை பெற்றுக்கொள்ள முயற்சிப்பதை போன்றே தெரிகின்றது. இது தொடர்பில் நாங்கள் எச்சரிக்கையுடன் பார்த்துக்கொண்டிருக்கின்றோம். பூச்செடிகள் என்று நினைத்து கொண்டுவந்தோம். இப்போது அனுபவம் இல்லாதவர்களால் பிரச்சினைகளில் சிக்கிக்கொண்டோம். இப்போது அனுபவம் உள்ளவர்கள் இருந்தால் நல்லது என்று ஜனாதிபதி நினைக்கின்றாரோ தெரியவில்லை. ஜனாதிபதி சிறந்த பேச்சாளராக இருந்தவர். ஆனால் இப்போது வரையில் மகாநாயக்க தேரர்களின் கடிதத்திற்கு பதிலளிக்கமால் இருப்பது ஏன் என்றும் தெரியவில்லை. ஜனாதிபதி கூறியதாக தெரிவித்த விடயங்கள் தனியாக நடத்திய கலந்துரையாடலில் கூறப்பட்டதா என்றும் தெரியவில்லை. அவரின் ஊடக அறிக்கையில் சட்டத்தரணிகள் சங்கத்தினர் முன்வைத்த விடயங்கள் தொடர்பில் எதுவும் கூறப்படவில்லை. நாட்டில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கைக எடுக்க வேண்டும். அதனைவிடுத்து ராஜபக்‌ஷக்கள் தொடர்பில் கூறிக்கொண்டிருப்பதில் பலனில்லை என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button