நாளைய செம்மணிப் போராட்டத்திற்கு வட-கிழக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும்

யாழ்ப்பாணம் செம்மணிப் பகுதியில் நாளை 14ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள போராட்டத்திற்கு வடக்கு-கிழக்கு வாழ் தமிழ் மக்கள் ஆதரவு வழங்கி போராட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் வடக்கு-கிழக்கு மாகாண செயலாளரும்-வவுனியா மாவட்டத் தலைவியுமான திருமதி சிவானந்தன் ஜெனிற்றா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்;
தாயகச் செயலணி அமைப்பின் ஏற்பாட்டில் நாளை 14ஆம் திகதி தொடக்கம் 17ஆம் திகதி வரை நான்கு தினங்கள் சர்வதேச நீதி கோரி நீதியின் ஓலம்-02 போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
17ஆம் திகதி மாபெரும் கவனயீர்ப்பு நடைபவனி ஒன்றும் முன்னெடுக்கப்படவுள்ளது.எனவே குறித்த நடைபவனியில் அனைத்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க உறவுகள் மற்றும் வடக்கு-கிழக்கு மாகாணம் எங்கும் வசிக்கின்ற தமிழ் மக்கள் தமது பலத்த ஆதரவினை வழங்கி எமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்.
செம்மணி மனிதப் புதைகுழியில் 500க்கும் மேற்பட்ட என்புத் தொகுதிகள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன.இந்த என்புத் தொகுதிகள் யாருடையவை என்ற தடயவியல் ஆய்வு நடவடிக்கைகள் எவையும் இடம்பெறவில்லை. எனவே தொடர்ச்சியாக இடம்பெறுகின்ற இனவழிப்புக்கு எதிராக அனைவரும் செம்மணியில் ஒன்றுகூடி போராட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என்றார்.
![]()