எழுமாற்றாகத் தோண்டப்பட்ட இடத்தில் ஒரு அடி ஆழத்தில் 4 எலும்புக் கூடுகள் தலையில்லாதும் ஒன்று கண்டுபிடிப்பு; மேலும் 3 இடங்களில் புதைகுழிகள்?

செம்மணி மனிதப் புதைகுழியில் எழுமாற்றாக தோண்டப்பட்ட இரண்டு குழிகளிலும் ஒரு அடிக்குட்பட்ட ஆழத்தில் நான்கு மனித என்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டதாக சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா தெரிவித்தார்.
இந்தக் குழியில் தலையில்லாத மனித என்பு கூட்டு தொகுதியொன்றும் அடையாளம் காணப்பட்டது.
செம்மணி மனித புதைகுழி காணப்படும் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் இரண்டு சோதனைக்கான இடம் ஒதுக்கப்பட்டு அகழ்வு முன்னெடுக்கப்பட்ட நிலையிலே இந்த மனித என்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது என சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மூன்றாம் கட்டத்திலுள்ள 56 நாள் அகழ்வு பணிகள் எதிர்வரும் 19ஆம் திகதி நிறைவு பெறும். அதனை தொடர்ந்து நான்காம் கட்ட அகழ்வு பணிகளை செய்வதா இல்லையா என்ற தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே அண்மையில் இடம்பெற்ற நிர்வாக ரீதியான கலந்துரையாடலில் முன்னாயத்தமாக பரிசோதனை குழிகள் அகழ்வதற்கான முடிவு எடுக்கப்பட்டது
இரண்டு குழிகளில் ஏற்கனவே அகழ்வு செய்யப்பட்டு இருக்கின்றது. இந்த நிலையில் இன்னமும் இரண்டு அல்லது மூன்று குழிகளில் இந்த சோதனை முயற்சி இந்த வாரத்திற்குள் முன்னெடுக்கப்படும். அதன் பின்னர் நான்காம் கட்ட அகழ்வு பணிகள் தொடர்பான தீர்மானம் எடுக்கப்படும் – என்றார்.
![]()