இலங்கைச் சிறைகளில் உள்ள தமிழக மீனவர்களுக்கு ஆபத்து!; உடனடியாக விடுவிக்குமாறு வட மாகாண மீனவர்கள் வலியுறுத்து

இலங்கை சிறைச்சாலைகளில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்குமாறு வட மாகாண மீனவ சங்கப் பிரதிநிதி நா.வர்ணாகுலசிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் மற்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு அவர் கோரிக்கை விடுப்பதாக நேற்று திங்கட்கிழமை(10) அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
38 தமிழக மீனவர்கள் வெலிக்கடை மற்றும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல்வேறு இலங்கை சிறைகளில் உள்ளனர். இதில் 16 விசாரணை கைதிகளும், 21 தண்டனை கைகளும் அடங்குவர்.இலங்கையின் பல்வேறு சிறைச்சாலையில் நடந்த கலவரங்களில் 33 பேருக்கு மேல் கொல்லப்பட்டுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளார்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த கலவரத்தில் சிறைச்சாலையில் இருந்த உன்னிகிருஷ்ணன் என்ற இந்திய கைதி ஒருவர் கொல்லப்பட்டார்.இந்நிலையில் பல்வேறு சிறைச்சாலையில் இருந்த 600 க்கு மேற்பட்ட சிங்கள கைதிகள், யாழ்ப்பாணம் சிறைச்சாலை உள்ளிட்ட வட,கிழக்கு தமிழ் மாகாண சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளார்கள்.
மேலும்,இலங்கை சிறைச்சாலைகளில் வெளியில் இருந்து சதிசெய்து, திட்டமிட்டு கலவரம் நடத்தப்படுவதாக இலங்கை அரசு கூறுகிறது. இதனால் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தவும் வாய்ப்பு உள்ளது.
இதனால் யாழ்ப்பாணம் உள்ளிட்ட சிறைச்சாலைகள் உள்ள தமிழக மீனவர்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
எனவே இந்த விடயத்தில் தமிழக முதல்வர் மற்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தலையிட்டு உடனடியாக தமிழக மீனவர்களை மீட்டு அவர்கள் குடும்பங்களிடம் சேர்க்க வேண்டுமென என அவர் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
![]()