நடுவீதியில் வைத்து பொலிஸ்மா அதிபர் கொல்லப்படுவாரா?

பொலிஸ்மா அதிபர் நடுவீதியில் கொலை செய்யப்படலாம் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ள கருத்து தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு பொலிஸாருக்கு நீதிமன்றத்தால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சாகர காரியவசம் வெளியிட்டுள்ள கருத்து தொடர்பில் கொழும்பு மத்திய குற்றவியல் விசாரணை பணியகம் நேற்று வியாழக்கிழமை கடுவெல நீதவான் நீதிமன்றத்திற்கு விளக்கமளித்து, அது தொடர்பான விசாரணைக்கு அனுமதி கோரிய போதே நீதிமன்றம் அதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
அண்மையில் பொதுஜன பெரமுனவினால் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பொன்றில் உரையாற்றிய சாகார காரியவசம், நாட்டின் 37 ஆவது பொலிஸ்மா அதிபரிடம் அரசுக்கும் நாட்டுக்கும் சேவையாற்றுமாறு கோருவதாகவும், ஆனால் அவர் வீதியில் பொதுமக்களிடம் அடிவாங்கும் பொலிஸ்மா அதிபராக வரலாற்றில் இணைவதை காண விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்தக் கருத்து அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையயில் கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் நேற்று விளக்கமளித்து, இது தொடர்பான விசாரணைக்கு அனுமதி வழங்குமாறு கொழும்பு மத்திய குற்றவியல் விசாரணை பணியகம் கோரிக்கை விடுத்திருந்தது. இதன்படி நீதிமன்றம் விசாரணைக்கு அனுமதி வழங்கியுள்ளது.
![]()