கிழக்கு மக்களின் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்த அணிதிரளுமாறு ஈழத் தமிழர் முன்னணி கட்சி தலைவர் ஜெயா சரவணன் அழைப்பு

கிழக்கை அழிவுப்பாதைக்கு தள்ளிய தமிழரசு கட்சியின் சுயநல அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து கிழக்கின் அரசியலை கிழக்கு மக்களே தீர்மானிக்கும். எனவே கிழக்கு மாகாண மக்களின் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்த ஜனநாயக வழியில் மக்கள் கட்சியுடன் அணிதிரளுமாறு முன்னாள் போராளியான ஈழத் தமிழர் முன்னணி கட்சி தலைவர் ஜெயா சரவணன் அழைப்பு விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு கிரானை தலைமையமாக கொண்டு இயங்கிவரும் ஈழத் மிழர் முன்னணி கட்சி ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் வாழும் அனைத்து மக்களது உரிமைகளையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாத்து ஜனநாயக வழியில் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காக ‘ஈழத் தமிழர் முன்னணி’ என்ற இயக்கம் முறைப்படி உருவாக்கப்பட்டுள்ளது என்பதை இலங்கை மக்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் அறியதருகின்றோம்.
எமது அமைப்பின் பெரும்பாலான உறுப்பினர்கள் மற்றும் தளபதிகள், கடந்த காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து செயல்பட்ட முன்னால் போராளிகளாவர்.
‘போராட்டம் என்னும் பெயரால் இழைக்கப்பட்ட தவறுகளும் ஏற்படுத்தப்பட்ட வலிகளும் எமது இதயங்களில் ஆறாத வடுவாக நிலைத்திருக்கும்’
கடந்த காலத்தில் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் என்ற பெயரில் பல மனித உரிமை மீறல்களும் சகோதரப் படுகொலைகள் முதல் ஏனைய சகோதர இன மக்களுக்கு எதிரான வன்முறைகள் வரை நடைபெற்ற கொடூரங்களை எமது உறுப்பினர்களை எண்ணி பார்த்து ஆழமாக வருந்துகின்றனர். இந்த வலி எமது வாழ்நாள் இறுதி வரை தொடரும்.
அந்த வகையில் போராட்ட காலத்தில் ஆயுத கலாச்சாரம் தலைதூக்கி இருந்த நேரத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களிடமும், இலங்கை வாழ் அனைத்து மக்களிடமும் ஈழத் தமிழர் முன்னணி சிரம் தாழ்த்தி இதயசுத்தியுடன் மன்னிப்பு கேட்டுக் கொள்கின்றது.
வன்முறை மற்றும் ஆயுத வழிகளை முற்றாக கைவிட்டு இனிவரும் எமது அரசியல் பயணம் முழுக்க முழுக்க ஜனநாயக வழியில் மட்டுமே இருக்கும் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறோம்.
கடந்த காலங்களில் நிலவிய இனவாத அரசுகளின் ஒடுக்குமுறைக்குள் உண்மைதான் என்றாலும் அன்றைய இலங்கை தமிழரசுக் கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய பாரம்பரிய அரசியல் கட்சிகள் இளைஞர்களை தூண்டிவிட்டு வன்முறைக்கும் பேரழிவுக்கும் வழிவகுத்தன. இந்த அரசியல் சுயநலமே ஆயிரக்கணக்கான இளைஞர்களை ஆயுதம்மேய்ந்தச் செய்து நாட்டை பேரழிவிற்குள் தள்ளியது.
பிரிவினவாத நிராகரிப்பு பிரிவினைவாதம் எமது நாட்டிற்கும் குறிப்பாகக் கிழக்கு மாகாணத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரழிவையே தந்துள்ளது. எனவே பிரிவினைவாத அரசியலை நாங்கள் முற்றாக நிராகரிக்கின்றோம்.
அதேவேளை அதிகாரப் பரவலாக்கம் பிரிக்கப்படாத ஐக்கிய இலங்கைக்குள்; கிழக்கு மாகாண மக்களின் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்துவதையும் சிறுபான்மை மக்களுக்கு உச்சபச்ச அதிகாரப் பரவலாக்கத்தை பெற்றுத் தருவதையும் எமது முதன்மை இலக்காகக் கொண்டுள்ளோம்.
கிழக்கு மாகாணத்திற்கு என்றும் தனித்துவமான சமூக பொருளாதார, அரசியல் பிரச்சினைகள் உள்ளன கிழக்கின் அரசியல் எதிர்காலத்தை கிழக்கு மாகாணத்தை புரிந்து கொள்ளாத வெளிசக்திகள் தீர்மானிப்பதை நாங்கள் ஒரு போதும் அனுமதிக்க முடியாது.
கிழக்கில் எமது பிரதான அரசியல் போட்டியாளராக இலங்கை தமிழரசு கட்சியை கருதுகின்றோம். கிழக்கை அழிவுபாதைக்கு தள்ளிய தமிழரசு கட்சியின் சுயநல அரசியலுக்கு முற்றுப் புள்ளிவைத்து கிழக்கின் அரசியலை கிழக்கு மக்களே தீர்மானிக்கும் சூழலை உருவாக்கி வரவிருக்கும் தேர்தலில் ஈழத்தமிழர் முன்னணி போட்டியிட்டு கிழக்கில் தனது வலுவான அரசியல் இருப்பை வெளிப்படுத்தும்.
கிழக்கில் வாழும் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களிடையே பரஸ்பர நல்லுறவை ஏற்படுத்துவதுடன் முஸ்லிம் மக்களை தமிழ் மக்கள் போன்றே ஒரு தேசிய இனமாக கருதி நிலவும் முரண்பாடுகளை ஜனநாயக உரையாடல் மூலம் தீர்த்துக் கொள்வோம்.
பிறப்பில் அனைவரும் சமத்துவம் என்ற அடிப்படையில் சாதி.பாலின, மற்றும் பிரதேச முரண்பாடுகள் ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக கடுமையாக செயற்படுவோம் என்பதுடன் தேசிய மக்கள் சக்தி அரசு முன்னெடுக்கும் இனவாதத்திற்கு எதிரான நிலைப்பாட்டையும் போதைப்பொருள் மற்றும் ஊழல் மோசடிகளுக்கு எதிரான நடவடிக்கைகளையும் எமது அமைப்பு மனதார வரவேற்கிறேன்.
அதேவேளை மக்களின் உரிமைக்கான ஜனநாயகப் போராட்டங்களை முன்னெடுக்கவும் தார்மீக ஆதரவு வழங்கவும் தயங்கமாட்டோம் என்பதுடன் கல்வி பொருளாதாரம் மற்றும் சமூக கட்டுமானங்களைப் பலப்படுத்தி கிழக்கு மாகாண மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த ஜனநாயக வழியில் மக்களை அணிதிரளுமாறு அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
![]()